Friday, August 27, 2021

நாராயணபுரம்

நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி

புதுச்சேரி, தமிழ் நாடு

August 27, 2021


ஒரு நாவலை வழக்கமாக வாசிக்கிற விரைவில் நாராயணபுரம் என்ற இந்த நாவலை நான் வாசிக்க ஏலவில்லை. திரும்பத்திரும்ப மையம் மாற்றி குவிமுறை மாற்றி பக்கங்கள் மாற்றி மாற்றி மாற்றி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இனம்தெரியாத மகிழ்ச்சியைவிட வேதனையானது வாசிக்கும் விழிகளில் துளிர்க்கும் துளிகளாக; மனத்தைப் புரோட்டா மாவு பிசையும் தேர்ந்த மாஸ்டராக நாவலாசிரியரின் மொழி. இன்னும் எவ்வளவோ உணர்வுகளைப் பூட்டி வைத்துக் கொண்டுதான் என் கருத்தை இங்கு எழுதுகிறேன்.

இது சாதாரணமான நாவல் அல்ல. இலங்கை பற்றி ஈழத்தைப் பற்றி போரைப்பற்றி கொழும்பைப் பற்றி எத்தனையோ பேர் எவ்வளவோ எழுதியிருக்கிறார்கள். அவற்றில் நான் முத்துவேலரையோ,அப்பன் ஜனனி முதலானவர்களையோ காண ஏலவில்லை. உணரவும் முடியவில்லை. குறிப்பாக நித்யா கலைவடிவம் என்றால் திலகம் குடும்ப வடிவம். நித்யாவிடம் கலை இருந்தது. அது இசைக்கலை. குடும்பக் கலை, திலகத்திடம் இருந்தது. இந்தக் குடும்பங்களோடு வாழ்ந்து யோசேப்புப் போல மரித்துப் போயிருப்பேனோ என்ற தாக்கம், என் மூளையில் எழுந்தது.

ராஜாஜி ராஜகோபாலன் மாதிரி ஒரு எழுத்தாளனை நான் இதுவரை உணர்ந்ததில்லை. பார்ப்பதற்கு ஒதுங்கி இருக்கும் இயல்பு அதிகம் உள்ளவராக இருந்தாலும்; விஷ்ணுபுரம் பந்தாக்கள் நாராயணபுரத்தில் வராமல் பார்த்துக்கொண்டது என் நண்பர் ராஜாஜி ராஜகோபாலனின் படைப்பாற்றல், நாவலைச் செதுக்கிய திறனாலேயேதான் ஆகும். "அதுதான் விஷ்ணுபுரம் என்ற தலைப்புப் பெயர் ஏலவே வந்துவிட்டதே... இவர் வேறு எதற்கு நாராயணபுரம் என்று தலைப்பிட்டது என்று திரும்பத் திரும்ப சலித்துக் கொண்ட என் இதயம் இன்று சாந்தி அடைந்து விட்டது. நாராயணபுரத்தைத்தான் எண்ணத்தில் முதலாவதாக என்னால் இப்பொழுது கருதமுடிகிறது, விஷ்ணுபுரம் எல்லாம் அப்பால்தான். இந்த நாவல் ஒரு முறை படித்து முடிப்பதற்கானது அல்ல. என் நண்பர் நாயகர் இதை எனக்கு மெனக்கெட்டு வாங்கிக் கொடுத்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டது. எங்கள் நண்பரும் இங்கே என் வசிப்புக்கு அண்மையும் சேய்மையும் அல்லாததுமாகிய மூலைக்குளம் தாண்டி அந்தண்டைய காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை நகரில் வதிகிறவருமான ஈழத் தமிழரான சிவப்பெருமகிழ்வானவரிடம் இந்த நாவலை வாசித்த பின் கொடுக்கிறேன் என்ற வாக்கைக் கொடுத்திருக்கிறேன். ஆனால், எப்பொழுது கொடுப்பேன் என்று தெரிய முடியாத அளவு மீளவும் மீளவும் வாசிக்கிறேன்.

இதில் கவிதைகள் பலவுஞ் சரிசரி துண்டுதுண்டுகளாக விரவிக்கிடக்கின்றன. உவமைகள், பழமொழிகள், விவசாயத்தைப் பற்றிய நேர்மையான -அற்புதமான விளக்கங்கள் பற்பல. பெண்மையின் நளினம் நாவல் முழுதும் பகைப்புலனாய். இந்த இடத்தில் எனக்கு ராஜாஜி ராஜகோபாலன் ஒரு பெண்ணாக இருந்து தன்னை மறைத்துக் கொண்டெழுதுகிறாரோ என்று கூட எண்ணத் தோன்றியது.. ஆண் பெயரில் ஒருவேளை எழுதி வரும் இவர் -- இந்தப் பெண்மணியோ ~ பெண்கள் பெயரில் தம்மை மறைத்துக் கொண்டு ஆபாசமாக எழுதுகிற சாணிகளிடை எப்படிச் சஞ்சரிக்கிறார் என்னும் சந்தேகநோய்கூட சற்றுத் தூக்கலாய் நிலவியது. அமரத்துவமான இந்த எழுத்துக்களை படிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது எவ்வளவு சொன்னாலும் இந்த நாராயணபுரம் ஒருமுறை வாசிப்புக்கு பொந்திகைப்படாது. அவ்வளவுதான்.
- தேவமைந்தன்
[புதுச்சேரிப் பசுபதி]

No comments:

Post a Comment