நாராயணபுரம்: பாமா இதயகுமார்
British Columbia, Canada
April 19, 2021
மனநிறைவு தந்தது வாசித்து முடித்த திருப்தியும் மகிழ்ச்சியும் கூடவே. திரு. ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் நாராயணபுரம் பற்றி தான் சொல்கிறேன். இதுபோன்று இனிதாவதொன்றில்லை என்று தொடங்கி 416 பக்கங்கள் எங்கள் கண்களை கட்டி அழைத்து சென்று இருக்கிறார் ஆசிரியர்.
யாழ்ப்பாணத்தின் தமிழ் மக்களின் பேச்சு வழக்கு முறை, அங்கு வாழ் மக்களின் வாழ்வியல் சூழல், சுற்றியுள்ள பள்ளிகள், கோயில் என்று எல்லாவற்றையும் காட்சி விபரின் போது கண் முன் காட்சிகளாக எங்கள் கற்பனை விரிய வைக்கிறது.
உண்மையை சொன்னால் எங்கள் மண்வாசனையை எங்களுக்கு நிறைய இடங்களில் ஞாபக படுத்தி ஒவ்வொரு இடத்திலும் ஆச்சரிய பட வைத்திருக்கிறார். எழுத்தின் சிறப்பை, அதன் அழகான வர்ணிப்பை, அந்த மண்ணில் பயணித்த அவரின் வாழ்வை, போராட்டk காலங்களோடு இணைத்து எல்லா கால கட்டத்துக்கு ஏற்ற ஒரு நாவலாக எங்கள் கையில் தவழ விட்டது அவருக்கு தவம், எங்களுக்கு வரம்.
கதையை பற்றி சொல்லிட விருப்பம் இல்லை, பலரின் ஆவலை தூண்டும் இந்த நாராயணபுரம் எல்லோர் கைகளையும் தழுவி செல்ல பிரிய படுகிறேன். நான் மெய்சிலிர்த்த தமிழ் சொற்கள் எங்கள் புழக்கத்தில் இருந்து எங்களை விட்டு விலகி போன்றவற்றை எல்லாம் ஒரே நாவலில் கொண்டு வந்து சேர்த்து ஆசிரியரின் சிறப்பு.
ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தின் கதை. நற்பண்புகள் பொருந்திய நாயகன் தேவன் மாணவனாகத் தொடங்கி அவனை சுற்றி வளர்கிறது கதை. அவனும் அவன் நண்பர்களும், தேவனின் காதல், கல்யாணம், வயதான பெற்றோர்களும் அவர்களின் சராசரி எதிர்பார்ப்பு , என்று மாறி காதல் கடந்து போக , அவன் பருவங்கள் மாற அவன், அவர் ஆவது தமிழரின் மரியாதைக்குரிய சொல்லாக காட்டப்படுகிறது சிறப்பு.
வாசிக்கும் போதே சிலவற்றை குறித்து வைத்தேன், நான் மறந்து போன போகாமல் ஞாபக படுத்திய சொற்கள், மற்றவர்களுக்கும் தெரிந்து கொள்ள என்று எழுதுகிறேன். விடுபேயன் இந்த சொல் வாசித்ததும் என்னையறியாமல் சிரிப்பு வந்தது. இங்கு மறந்து போன சொல். இதை நான் ஊண்டி வாசித்தேன். இந்த ஊண்டியும் கண்டேன் புத்தகத்தில்.
இந்த புத்தகத்தை குறிப்பாக தமிழ் பேசும் அனைவரும் வாசிக்க வேண்டும் எதற்கு எனில் புழக்கத்தில் இல்லாத அறியாத பல சொற்களை அறிந்து கொள்ள வாய்ப்பும் தருணமும்.
அருவருப்பு என்று பாவித்து பழகிய எங்களை அரியண்டப்படுத்தி நானும் இருக்கிறேன் என்று நினைவூட்டினார். உதாரணமாக யமக்காவல், பக்கீஸ் பெட்டி, துளவாரம், வாரப்பாடு, பறவாதிகள், துமிக்கிறது, கரவற்ற சொற்கள், வெப்பியாரம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக ஒரு பழமொழி எள்ளு போட இடம் இல்லை என்போம், இங்கே ஈக்கு குத்த இடமில்லை என்ற பழமொழி எனக்கு புதிதாக இருந்தது.
நிச்சயமாக ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல். காட்சிகளை அவரின் வர்ணிப்பு மீண்டும் வாசிக்க தூண்டியது. இந்த இலக்கியத் தொடர் எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்து நீங்காமல் சம்மணக்கால் போட்டு இருக்கும் என்பது உறுதி.
வாழ்த்துக்கள். நாரணாயணபுரத்தைத் தரிசித்தேன், மாயவன் சிறப்பு மனதை தொட்டது. முதலில் வாசித்து மகிழ்ந்தேன், அழகான பிரசவம் நாராயணபுரம். வாழ்த்துக்கள் கதாசிரியருக்கு.

No comments:
Post a Comment