Friday, August 27, 2021

நாராயணபுரம்

நாராயணபுரம்: சுபி நரேந்திரன்

London, England

May 2, 2021



திரு ராஜாஜி கோபாலன் எழுதிய 'நாராயணபுரம்' நாவலை சுவாசித்து முடித்து விட்டு அதன் நறு நறுமணத்தை உங்களோடு பகிர்கிறேன்.

நான் ஒரு பெரிய இலக்கிய வாதியோ, கதாசிரியரோ, அல்லது கவிஞரோ இல்லை. தமிழை உயிராய் நேசிக்கும் ஒரு சாதாரண முகநூல் வாசகி. கிட்டத் தட்டப் பத்து ஆண்டுகளாக இந்த குதிரை இல்லாத ராஜ குமாரனோடு முகநூலில் பயணிக்கிறேன். இவருடைய பகிர்வுகள் எதையும் தவறாது படித்து விடுவேன். சிறு கதைகளை படிக்க தொடங்கினால் அதை முடிக்காமல் விட முடியாத அளவுக்கு கதையோடு மனம் கட்டுப் பட்டு விடும். இவர் மேல் எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு.

யாழ்ப்பாணத்தில் வல்லிபுரம் கோவிலை சூழ்ந்த கிராமங்களில் இந்த கதை வளர்கிறது. கதை தொடக்கமே மணற்காடாய் பரந்திருக்கும் கடற்கரையும் அதை அண்மித்த 'மாயன் கோவிலின்' அழகும்தான். அந்த வர்ணனைகள் மனதை மிகவும் கவர்ந்து ஆசுவாசப் படுத்துகிறது.

யாழ்ப்பாணக் கிராமமும் அதன் மனிதர்களும் அவர்களின் பக்தி, விருப்பு வெறுப்பு என்று எல்லாமே அழகான எங்கள் ஊர் தமிழில் உரையாடலில் இயல்பாக கதை போகிறது. இந்த நாவலின் முழு வெற்றியும் இதில் பேசப்படும் கிராமத் தமிழில்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கிரமங்களில் மட்டும் பேசப் படும் நிறைய சொற்களை காண முடிகிறது. சாதாரணமாகவே ராஜாஜிக்குரிய நக்கல் நளின நகைசுவை டச் நாவல் முழுவதும் இருக்கிறது. பக்தி, அன்பு, கோவம், காதல், பயம் என்று எந்த உணர்வுக்கும் குறை இல்லை. நவரசங்களையும் குழைத்து அற்புத வண்ணம் தந்திருக்கிறார். எனக்கு மிகவும் ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் இசையை இவர் இந்த நாவலில் கையாண்ட விதம்தான். இசையும் காதலும்இங்கு பெரும் பங்கை வகிக்கிறது. காதலை இசையோடு இணைத்து அழகாக படிப்பவர் மனக்களையும் சொக்க வைத்து விட்டார்.

முதல் தலைமுறையின் நாயகன் முத்துவேலர். கண்டிப்பு நிறைந்த அசல் யாழ்பாணத்து அப்பா. இவரில் எனக்கு சரியான கோவம் மகனின் படிப்பை இடையில் நிப்பாட்டியது மட்டுமில்லாமல் காதலுக்கும் எதிரியாகிவிட்டார். ஆனால் மரணப் படுக்கையில் மகனிடம் மன்னிப்பு கேட்டு எனது மனதை தொட்டு விட்டார். அவருடைய மகன் தேவன் இரண்டாம் தலை முறை நாயகன். இவருடைய மகன் அப்பன் மூண்டாவது தலை முறை நாயகன். மூன்று தலை முறைகளையும் கதை சொல்லி நிக்கிறது.

இவை எல்லா வற்றோடும் நாட்டின் போர் சூழலும் இணைந்தே வருகிறது. போர் அவலங்களை தனியாக சொல்லாமல் கதையோடு இணைத்து கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. அதே போல்தான் நாராயணபுரத்துக் கிராம வரலாறும் கதை போகிற போக்கில் அழகாக தூவப்ப பட்டுள்ளது.

என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்குப் புரியும் எழுத்து எனக்கு மிகவும் பிடித்தது. இதுவே மணற்காடரின் வெற்றி.
அருமையான
அனுபவத்தை தந்த ராஜாஜிக்கு மிக்க நன்றிகள்.

எல்லோரையும் இந்த நாவல் போய் சேர்ந்து பாராட்டுகளும் புகழும் ராஜாஜியை வந்து சேர மனமார வாழ்த்துகிறேன். God bless you.

இந்த நாவலை என்னை வந்தடைய செய்த எனது அன்பு நட்பு ஜோவுக்கும் J P Josephine Baba எனது மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment