நாராயணபுரம்: முதல் அறிமுகம்
குப்பிழான் ஐ. சண்முகன்
கரணவாய், கரவெட்டி, இலங்கை
March 2, 2021
ராஜாஜி இராஜகோபாலனின் நாராயணபுரம் நாவல் வெளிவர இருப்பதையறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
எனது நீண்டகால நண்பரான (ஏறத்தாழ ஐம்பது வருடங்கள்) அவரின் வாழ் நாள் கனவு இதுவென்றே சொல்வேன். கடந்த ஐந்தாறு வருடங்களாக இதே சிந்தனையாகவிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
அவரின் வளரிளமைக்கால களமும், காலமுமே இந்நாவலில் விரிகின்றது. அவரது கிராமமும், அவரது சூழலிலிருந்த பிரபலமான வல்லிபுரக் கோவிலும், கோயில் உற்சவகாலங்களில் பனிப்புகார் நிரம்பிய காலை வேளைகளில் - உடல் நடுநடுங்க நடந்து சென்ற ஒற்றையடி பாதையும், இளமைக்கால நண்பர்களும், அவர்களின் சந்திப்புக்கள் - இலட்சியக்கனவுகளுமென நாவலின் முதற்பகுதி விரிவு பெறுகிறது.
நாவலின் பிற்பகுதியில் எமது சூழலில் போராட்டங்கள் கருக்கட்டும் காலங்கள் பேசப்படுகின்றது. குடும்பங்களிலிருந்து காணாமல் போன இளைஞர்களும், அவர்களைக் காணாது தவிக்கும் குடும்பத்தினரும், பின்னர் நிகழ்ந்த அவல முடிவுகளுமென கதை வளர்ந்து செல்கிறது.
முடிவாக, ‘நாராயணபுரம்’ என்கின்ற யாழ்ப்பாணத்து வல்லிபுரக்கோவிலில் சூழலிலுள்ள கிராமங்களின், மக்களின் வாழ்வின் இலட்சியங்களையும் கனவுகளையும், தவிப்புக்களையும் - இந் நாவல் பேசுகின்றது.
எங்கள் போராட்டம் கருக்கட்டிய 15, 20 வருட யாழ்ப்பாணத்து வாழ்வை இந்நாவல் பதிவு செய்கிறது. கிராமங்களின் அழகையும், போராட்ட உணர்வின் தகிப்புக்களையும் பேசும் இந் நாவல், முன் உதாரணங்களிலில்லாத ஒரு முக்கியமான நாவலென்றே சொல்வேன்.
கதையின் ஊடுபாவாக ஒரு காதல் கதையும் இழையோடுகின்றது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
(இரண்டொரு வருடத்தின் முன்பு, தட்டச்சுப் பிரதியாக இந்நாவலை வாசித்த நினைவுகளிலிருந்தே இதை எழுதியுள்ளேன்.)

No comments:
Post a Comment