Friday, August 27, 2021

நாராயணபுரம்

நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி

புதுச்சேரி, தமிழ் நாடு

July 26, 2021


ராஜாஜி ராஜகோபாலன் அவர்களுக்கு ஓர் ஏக்கம் இருந்திருக்கும்போல் உள்ளது. 'கவிதைக் காவிய'மாகத் தன் மூன்றாவது நூலை மாயவன் புகழ்பாடும்படியாக அமைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் போலத் தோன்றுகிறது. இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் நாவலின் முதலாம் பாகத்தில் *எல்லையற்ற பெருவெளி* என்று தொடங்கும் நாவலின் தொடக்கத்தை உட்கொண்ட முதற்பத்தி முதலாக ஐந்தாம் பத்தி முடிய அமைந்துள்ள வண்ணனையைக் காட்டலாம். *தூரத்துச் சவுக்கு மரங்களிலிருந்து சோவென்ற ஓசையுடன் காற்று வந்து வருடிச் செல்கிறது. கையோடு வெண்மணலையும் [அவர் மீது] வீசிவிட்டுச் சிறுபிள்ளை போல் நகைத்தபடி ஓடி ஒளிந்து கொள்கிறது* - *மனதுக்கு எட்டிய தொலைவில் முணுக்முணுக்கென என எரியும் நெய் விளக்கொளியின் ஜொலிப்பில் சக்கர வடிவாகக் கரந்துறையும் மூலவர்* - *தொட்டம் தொட்டமாய் ஒற்றைத் தென்னைகளும் வடலிப் பனைகளும் வானத்தை நோக்கி நீருக்குத் தவம் செய்கின்றன. மண் மேடுகளில் நாவலும் மகிழமும் ஈச்சையும் பாலையுமாக மணற்காடு நெய்தலும் மருதமும் முயங்கிய நிலத்தின் இலக்கிய வடிவமாய் அப்பிரதேசத்தின் தன்மையை பறைசாற்றுகிறது* ~ஆகியவை அவை. 'மணற்காடர்' என்று இவர் புனைந்து கொண்ட பெயருக்கான 'ஏது'வை, இத்திணைநிலத்தின் தன்மைநவிற்சி புலப்படுத்தாநிற்பதை ஓர்பவர் உணர்வர்.

முத்துவேலர், அவணிருந்த தேர்மூட்டுப் போதிமர நிழலில் கூடியிருந்த மக்களிடையே விருந்தினரன்ன ஈரறிஞர், அவ்விடத்தாலாய வரலாறு மொழிவதைச் செவிமடுத்துப் பெருமிதம் கொள்கிறார். காரணம், அப் பதியின் பெயர் வல்லிபுரம். ஈழத்து வடபுலத்துத் தலைநகரமாய் விளங்கியது. அவண் ஓர் நெய்தல் துறைமுகமிருந்தது. இந்து மாக்கடல் பெருவாணிகத்துக்கு நடுநாயகமாகத் திகழ்ந்தது. ஈழத் தமிழரின் தலைநகரான சிங்கை நகரும் அதுவே. அங்கிருந்துதான் புது நாடுகள் தேடி மக்கள் புலம் பெயர்ந்தனர். ஆதாரம்?

அவ் வீரறிஞர் சுட்டிய தொன்மைச் சின்னங்கள்..மணல்குன்றுகள், பற்றைக்காடுகள், கீச்சுக் கிட்டங்கள், கூரையோட்டுத் துண்டங்கள், கிணறு குளங்கள்; ஈமத்தாழிகள், புராதன புத்தர் - வினாயகர் படிமங்கள், கட்டடச் சிதிலங்கள் ... இன்னோரன்னவை அக்காலத்தே அகழ்ந்தாய்ந்து அறிந்தவை.

முத்துவேலர், இப்போது தன்முன்னே தோன்றும் *அமானுஷ்யமானதொரு அருள்சுரக்கும் மயக்கத்தை* நல்கும் விமானம் ஓங்கிய விண்ணகர மாயவன் தன்னைப் பணிந்து மொழிந்தார்:-
**மாயவா! என் குடும்பம் உனக்குப் பரம்பரை பரம்பரையாக ஊழியம் செய்து வருகிறது. நீ இங்கே வந்து காலூன்றிய வரலாறும் இந்த மண்ணின் வரலாறும் அலாதியானது. அதை உள்ளது உள்ளபடி எழுத எவருமே முன் வராமல் போகலாம். ஆனால் நீயும் வாழ்ந்து எங்களையும் வாழ வைக்கும் வரலாறுதான் எனக்கும் என் பின்னடிக்கும் வழிகாட்டப் போகிறது!**
- ஓமோம். முத்துவேலரின் பிரார்த்தனை நெடுங்காலம் தாண்டி, கனடா ஒந்தாரியோவில் கண்டுயின்று கனாக்கண்டிருந்த மணற்காடரின் கனவில் வந்து, "ஓம்.. அதை நீவிரேன் செய்யலாகாது?" என்று உசுப்பிவிடவேதான் **நாராயணபுரம்** நாவலுருவில் நம் கைகளில் வீழாநின்றது காண்மின் நண்பீரே.

- தேவமைந்தன்,
புதுச்சேரி
2021/7/26
[வளரும்]

No comments:

Post a Comment