நாராயணபுரம்: அருந்ததி குணசீலன்
Colombo, Sri Lanka
April 15, 2021
என் இனிய நண்பர் ராஜாஜி Rajaji Rajagopalan எழுதுவதை தவமாகக் கொண்டவர். அவர் வடித்த கிராமத்து விருந்து நாராயணபுரம் என்ற நாவல் என்னிடம் வந்து சேர்ந்ததை இட்டு மனம் மகிழ்கிறேன்.
கிட்டத்தட்ட நான் முகநூலில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து என்னுடன் பயணிக்கும், உரிமையுடன் பழகும் நண்பர். அவ்வப்போது சிறுகதைகளை முகநூலில் அவர் பதியும் போது, என்னைப்போல் பலர் அவரவர் கருத்துகளை வெளிப்படையாக எழுதி அவருடன் வாதிடுவோம். அவ்வேளை மனம் கோணாது பதில் தந்து அசத்துவார். அந்த நாட்கள் தினமும் அவருடன் கருத்து மோதலில் ஈடுபடுவது சுவையாக இருக்கும்.
நாராயணபுரத்தின் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து:
ஈழத்தின் கிராமிய அழகு,சமுக வாழ்வியல், அங்குள்ள மாந்தரின் மன உணர்வோட்டங் கள், பலதரப்பட்ட சுவையான கதாபாத்தி ரங்கள் போன்றவற்றை நாம் அலுக்காமல் தரிசிக்கும் படி வைத்துள்ளார் .
ஒரு காலத்தில் நாவல்களை ஓடியோடி ஒரே மூச்சில் வாசித்த என்னை, வாழ்வியல் மாற்றம், போர்க்காலத் தலையிடிகள், இடம்பெயர்வுகள், சிந்தனை மாற்றங்கள் நாவல் வாசிப்பதில் இருந்து என்னை தூரே தள்ளிவைத்தன. என்னுள் இரசனை மாற்றத்தை(மனோதத்துவ, ஆன்மீக சிந்தனைகள், மக்களை சிந்திக்க விட்டுச் சென்ற பெரியவர்களின் வாழ்வியல்) ஏற்படுத்தி விட்ட நிலையில்
இராஜாஜியின் நாராயணபுரம் என் கையில் கிடைத்துள்ளது.



அவரின் சிறப்பான கருத்துச் செறிவான எழுத்து ஆளுமை எனக்குத் தெரிந்தபடியால், விருப்புடன் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.



இந்துசமுத்திரம் எழுப்பிய ஓங்காரத்தை அணைத்தபடி துயிலும் மணற்காட்டுப் பெருவெளியில், யாழ்நகரின் வடபுறம் அமைந்த புகழ் பெற்ற வல்லிபுரக் கோயிலை மாயவன் கோயில் என அழகாகப் பதிவிட்டு, அதன் எல்லையற்ற அழகை விபரிப்பதிலிருந்து, வீதியோரம் சாமரம் வீசும் மரங்க ளையும், மரங்களின் கீழேயிருந்து களை கட்டும் பெயர் போன ஓடக்கரை தோசை வியாபாரம் நாசியைத் துளைக்க, வழியெங்கும் கூவி விற்கும் வியாபாரிகள், இப்படியே வயல்வெளிகளையும் நீர்நிலை களையும் அணைத்தபடி துயிலும் அப்பிரதேசத்தைப் பற்றிய விவரணம் எம்மை அந்த இடத்துக்கு உணர்வோடு தூக்கிச் செல்கிறது என்றால் மிகையாகாது.
ஊர்வழக்கில் உள்ள சுவையான நையாண்டிகளை, கோவண வைரவியார் ஒழுங்கை, தாமர் ஒழுங்கை கந்தசாமி ஓடை என உள்ளூர்ப் பெருமக்களை நினைவு கூறும் இடங்களை அறிமுகப் படுத்துவதில் இருந்து, ஊரில் அடிப்படை சாதீய உணர்வுள்ள, பெருமைபிடித்த, நாட்டாமை போன்ற முத்து வேலரையும், அவருக்கு நேர் எதிர் குணத்தில் பிறந்த அவர் மகன் தேவனையும் அறிமுகப் படுத்துதலில் சுவாரஸ்யமாகத் திரில்..!! ஆகத் தொடங்குகிறது முதலாம் பாகம்.


ராஜாஜி, உங்கள் கனவுகளின் பெரு விருட்சமான உங்கள் நாவலை எழுதுவதற்கு நீங்கள் எவ்வளவு சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டிருப்பீர்கள் என்பதுவும் வாசகர்களின் விமர்சனத்தில் எவ்வளவு ஆவலுடனும் இருப்பீர்கள் என்பது புரிந்ததால் எனது சிறு முன்னோட்டத்தை எழுதியுள்ளேன். இது பலரையும் கவரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
உங்கள் படைப்பு பலரையும் சென்று அடையட்டும் என வாழ்த்துகிறேன்.



இப்படிக்கு
அருந்ததி குணசீலன்.
No comments:
Post a Comment