Wednesday, July 9, 2025

மதனசிங்கம் என்ற ஒரு இங்கிலிஸ் டைப்பிஸ்ட்

January 7, 2020


“ராஜகோபால், நீர் அலுவல் பார்த்து அனுப்பின டைப்பிஸ்டுக்கு டைப்ரைட்டரே என்னெண்டு தெரியாது.”

“ஆரைச் சொல்லுறியள், சேர்?”

“வேறை ஆர்? மதனசிங்கத்தைத்தான் சொல்லுறன்.”

மன்னார் கல்வித் திணைக்களத்திலிருந்து கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு மாறி வந்த தலைமை எழுதுவினைஞர் தர்மராசா தலையில் அடித்துச் சொன்ன செய்தி இது.

மதனசிங்கம் எங்கள் வீட்டுக்குப் பின்னாலுள்ள தெருவில் வாழ்ந்தவர். என்னிலும் பத்து வயது மூத்தவர். பள்ளிக்கூட நாட்களில் எனக்கு“வொல்லி போல்” பழக்கியவர். எங்கே கண்டாலும் அன்பாய்ப் பழகுபவர். அவர் ஒரு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் இரவு நேரக் காவலாளியென்னும் கடை நிலை ஊழியராகக் கடமையிலிருந்தார். சம்பளம் பத்தாது, நாலைந்து பிள்ளைகள். குடும்பம் சிரமப்பட்டது. நான் ஊருக்கு விடுமுறையில் வந்தபோது காண வந்தார். வந்து அரை மணியாகிவிட்டது, எதற்காகக் காண வந்தாரெனச் சொல்லத் தயங்கியபடி இருந்தார்.

“என்னண்ணை, ஏதேனும் சொல்ல வந்தியளோ?” என்று நானாகக் கேட்டபிறகே சொன்னார்.

“தம்பி, என்ர உத்தியோகம் என்னெண்டு தெரியும்தானே, நீங்கள் கல்வி அமைச்சிலை இருக்கிறியள், எனக்கு வேறை நல்ல ஒரு உத்தியோகம் எடுத்துத் தந்து வழி காட்டவேணும். உங்களைக் கடைசிவரை மறக்கமாட்டன்.”

நான் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன். இவர் இப்போது கடை நிலை ஊழியர். எடுத்தவுடன் தூக்கி இன்னொரு நல்ல வேலையில் போட முடியாது. இவராக முயற்சித்துப் போகக்கூடியவரும் இல்லை. இவருடைய மட்டத்தில் உள்ளவர்களை அடுத்த உயர்தரத்திலுள்ள உத்தியோகத்துக்குப் பதவி உயர்த்துவதற்கென ஒரு பரீட்சை இருந்தது. அதில் தட்டெழுத்தாளர் பிரிவும் இருந்தது.

“அண்ணை, நீங்கள் டைப் அடிப்பீங்கள்தானே?”

“டைப் அடிக்கிற மெசினைக் கண்டிருக்கிறன்.”

“அப்ப ஒரு வழி சொல்லுறன் செய்து பாருங்கோ.”

“அதுக்கென்ன, தம்பி சொல்லுங்கோ, கட்டாயம் செய்வன்.”

“குல்லா வேலுப்பிள்ளையன்ர டியூட்டறியிலை இங்கிலிஸ் இல்லாட்டில் தமிழ் டைப்பிங் திறமாப் பழகிப்போட்டு கவுன்மென்ட் சோதினை எடுங்கோ. அதிலை பாஸ் பண்ணினால் டைப்பிஸ்ட் வேலைக்குப் போகலாம். சம்பளமும் ரண்டு பங்கு கிடைக்கும்.”

மதனசிங்கம் அண்ணை யோசிக்காமலே சம்மதித்துவிட்டார். அந்தக் கிழமையே குல்லா வேலுப்பிள்ளையின் டியூட்டரியில் இங்கிலிஸ் டைப்பிங் படிக்கப் போய்விட்டார். அடுத்த சில மாதங்களில் கடை நிலை ஊழியர் பதவி உயர்ச்சிச் சோதனைக்கும் விண்ணப்பித்துத் தோற்றிவிட்டார்.

திரும்பவும் நான் விடுமுறையில் ஊருக்குப் போனபோது என்னைக் காண வந்தார்.

“எப்படி அண்ணை, சோதினை நல்லா செய்தீங்கள்தானே?”

“அது தம்பி, குல்லா சோதினைக்குத் தந்த மெசின் கொஞ்சம் பழசு. அதாலை மிச்சம் ஸ்லோவாகத்தான் அடிச்சனான். அதுதான் யோசிக்கிறன்.”

எனக்கு விளங்கிவிட்டது. அண்ணை சோதினைக்குப் போய் மெசினில் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடித் அடித்துப்போட்டு வந்திருக்கிறார்.

“உங்களுக்கே திருப்தி இல்லைபோலை தெரியுது.”

“ஓம் தம்பி, நான் சோதினை துப்பரவாகச் செய்யவில்லை. அங்கினைக்கை ஏதேனும் செய்து என்னை பாஸ் பண்ணச் செய்யவேணும். புட்டளையான் (புற்றளைப் பிள்ளையார்) உங்களைக் கைவிடமாட்டார்.

கடைசியில் புட்டளையான் என்னை மட்டுமில்லை அவரையும் கைவிடவில்லை. அண்ணை சோதனை சித்தியடைந்து முதன் முதலாக மன்னார் கல்விக் கந்தோரில் இங்கிலிஸ் டைபிஸ்டாக வேலையில் சேர்ந்துவிட்டார்.

இப்போது எங்கள் தலைமை எழுதுவினைஞர் தர்மராசாவுக்குப் பதில் சொல்லித் தப்பவேண்டும்.

“ஏன் சேர், என்ன பிரச்சனை?”

“என்ன பிரச்சனையோ? நீர் அலுவல் பாத்து அனுப்பின மதனசிங்கத்துக்கு டைப்ரைட்டரே என்னெண்டு தெரியாது என்டு சொன்னன்.”

“அப்பிடியே சங்கதி?”

“பின்னை என்ன? அதோடை அவரன்ர வேலையை மற்ற ஆக்கள்தான் செய்யவேண்டிக் கிடக்கு.”

“பாவம் சேர், நல்லா முட்டுப்பட்ட குடும்பம்.”

“ஆனால் என்ன தெரியுமே, அவையள் செய்யவேண்டிய வெளி வேலையெல்லாத்தையும் மதனசிங்கம்தான் செய்து குடுக்கிறார். கந்தோரிலை தேத்தண்ணி போட்டுக் குடுத்தாலென்ன, அவையளுக்குத் தேவையான அரிசி, மீன், மரக்கறி, போத்தில் போலை சாமான்கள் வாங்கக் கடைக்குப் போனாலென்ன, சைக்கிள் திருத்தினாலென்ன, ரயில் டிக்கட் வாங்கினாலென்ன அத்தினை அலுவலையும் அவர்தான் செய்து குடுக்கிறார்.”

“பிறகென்ன சேர், இப்பிடியொரு நல்ல மனிசன் டைப்பிஸ்ட் சோதினையிலை எடுத்த பதினைஞ்சு மார்க்ஸ் எழுவத்தைஞ்சாக மாறாட்டில் புட்டளைப் பிள்ளையார் பார்த்துக்கொண்டிருப்பாரோ?”

No comments:

Post a Comment