Thursday, July 10, 2025

தடங்கள் சுவடுகளாகின்றன - கங்கைமகன்

 ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து


மன்மத ஆண்டின் கதாநாயகர்களில் ஒருவராய் என் ஆழ்மனதில் பதியம் வைக்கப்பட்டவர்தான் இக் கவிதை நூலின் நாயகன் திரு. இராஜாஜி  இராஜகோபாலன் அவர்கள். வாக்கு மூலங்கள் பதிவுசெய்யப்பட்டு நூல்வடிவம் பெறுகின்ற செய்திகேட்டு என் புலன்வழி வந்த விசாரணைகளை ஏற்கனவே பதிவாக்கியிருக்கின்றேன். சித்திரைப் புத்தாண்டன்று (14.04.2015) இந்த வருடத்திற்கான வெகுமதிப் பரிசாகத் தங்கள் நூல் என்கரம் கிட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நூலை எதிர்பார்த்து எழுதுவதற்கும், எதிரில் பார்த்து எழுதுவதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு. அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியீட்டின் முன்னான சில பகுதிகளையும்  இங்கே பதியம் வைக்கின்றேன்.

வெளியீட்டின் முன்..............

வேரறுந்த விழுதுகளாய் புலம்பெயர் மண்ணில் வாழ்வுதனைத் தொலைத்தவர்களாய் வாழ்ந்துவரும் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களில் திரு. ராஜாஜி ராஜகோபாலன் அவர்களும் ஒருவராவார். வக்கீல் தொழிலில் கனடாவில் நல்ல அனுபவமும், புலமையும் பெற்றுப் புகழுடன் வாழ்பவர்.

எனது 1505 முகநூல் நண்பர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். தன்னைத் தாழ்த்தி மற்றவர்களைப் பெருமைப் படுத்துவதில் இவர் மிகவும் பெருமைக்குரியவர்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். (குறள் 527)

என்ற குறளுக்கு அமையத் தனது உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் தமிழையும், தமிழ் இலக்கியத்தையும் தன் வீட்டுப் பெட்டிக்குள் தாராளமாக அடைத்து வைத்திருப்பவர். சிறுகதை, நாவல்கள், கவிதைகள் போன்றவற்றிற்கு அவர் தூவும் தமிழ் அழகு.

முகநூலில் எனக்கும், என் மனைவி புனிதா அவர்களுக்கும் நண்பராகி எங்கள் வீட்டுக்குள் தலைவாழை இலைபோட்டு விருந்து வைக்கக் காத்திருக்கும் உறவினர்போல் ஆகிவிட்ட மகிழ்ச்சி எனக்கு இருக்கின்றது.

இனிய உளவாக இன்னாது கூறல் கனி இருக்கக் காய் கவர்ந்தற்று (குறள்) என்பது போல அவரது இனிய தமிழ் நடைப் பேச்சுக்கள், கதைகள் என்னை மேலும் அவர்பால் பற்றுவைக்க நேர்ந்தது.

அவரது புதிய வெளியீடாக வெளியிடப்படவுள்ள "ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்" என்ற கவிதைத் தொகுதி சிறப்பான வெளியீடு காணவேண்டும் என்பதனை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதனைக் கருத்திற்கொண்டே இதனை இங்கு பதிவு செய்கின்றேன்.

வாக்குமூலம் என்பது வக்கீல்களுக்குப் பிரபல்யமான ஒரு சொல். இந்த வக்கீல் எதனைப் பிரபல்யப் படுத்தி இருக்கின்றார் என்பது அவரது வாக்குமூலத்தை அறிந்த பின்னரே நாம் புரிந்து கொள்ளலாம். நிட்சயமாக அவரது வாக்குமூலம் எல்லோரையும் விடுதலை செய்யும் என்பதே எனது கருத்தாகும்.

நூலுக்குள் நுழைந்த பொழுதுகளில்.......

ஈழத்தமிழர் சமுதாயத்தின் அவலங்களை ஒரு தனிமனிதனாக நின்று உலகிற்கு உணர்த்துவது என்பது மிகவும் இலகுவான விடையம் அல்ல. ஆசிரியரின சமூகப் பார்வை என்பது அவர் வாழும் நாட்டைவிடப் பிறந்த  நாட்டிலேயே சூல் கொண்டுள்ளது என்பது பாராட்டப்படவேண்டிய ஓர் கட்டாய நிலைப்பாடாகும். இலக்கியம் என்பது எக் காலத்தில் எழுகின்றதோ; அக்காலச் சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும்  கண்ணாடி போன்றது. அந்த வகையில் ஆசிரியர் அவர்கள் காலத்தின் கட்டளையைத்  தன் காலத்தின் கட்டாயமாகப் பதிவாக்கி இருப்பது பலறூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த நூலை வாசிக்கும் ஒருவருக்கு எக்காலகட்டப் பகுதியில் இது எழுதப்பட்டது என்பது வெள்ளிடைமலையாகக் காட்சியளிக்கும். இலக்கணங்களோடு உரசிப் பார்க்காமல், இதயங்களோட உரசி உரசிப்பார்த்து எழுதப்பட்டதாலோ என்னவோ வாசிப்போர் இதங்களில் நண்பர் இராஜாஜி அவர்களது முகமே விம்பம் ஆகின்றது.

காலம் ஒரு மனிதனைக் கருக்கட்ட வைத்து அதன் பிரசவத்தை உலகெங்கம் கொண்டு சென்றிருக்கின்றது என்பதனைத் தெளிவாகப் பிரதினிதித்துவப் படுத்துகின்றது அவரது நூல். வரலாற்றைக் காலமாக்கிக் காலத்தை வாழ்க்கையாக்கி உலகப் பாத்தியில் அவர் நட்டுவைத்த நாற்றுக்களின் நல்ல அறுவடையே இந்த வாக்கமூலமாகும். தேவை கருதிய உற்பத்தியா அல்லது உற்பத்தியின் பின்னான தேவையா என்பதனை வாசகர்களே தீர்மானிக்கட்டும் என்ற விதத்தில் இலக்குவைத்து எய்யப்பட்ட பல அம்புகளுக்குக் கர்த்தாவாக இந்த நூலாசிரியர் தன் உழைப்பால் உயர்ந்து நிற்கின்றார்.

கவிதைப் பொருட்களின் விம்பங்கள் கண்ணைவிட்டு அகலாமல் வாசிப்பவர் மனங்களில் பசுமரத்து ஆணிபோல் ஏற்றுவது என்பதுமிகவும் சாதாரணவிடையம் அல்ல. சங்கம் தொட்டு இன்று வரையுள்ள இலக்கியச் சமுத்திரத்தில் கிளிஞ்சல்களைக் கைப்பற்றி மூச்சத் திணறாமல் தமிழைச் சுவாசித்து அகராதிகளுக்கு அப்பால் தன்னைத்தானே சிருஸ்டித்து விடைகண்டு இருக்கின்றார்.

பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு இரண்டையும் குழைத்து நெடு நல்வாடைக்கு விடைகூறி, குறுந்தொகைக்குள் இந்த நூல் தானாக ஒழிந்து கொள்கின்றது. மரபுக் கவிதைகளை வென்று, மணிப்பிரவாள நடைக்கு மாசற்ற தமிழில் தன்னை நகர்த்தி இருக்கின்றார். ஒவியனால் ஓவியமும், சிற்பியினால் சிலையும் உருவாக்கம் பெறும் வேளைகளில் கவிஞர்களை யார் உருவாக்குகின்றார்கள் என்ற கேள்விவருகின்றது. கவிஞர்கள் தங்களைத் தாங்களே செதுக்குகின்றார்கள்  என்பதனை நிலைநிறுத்துவதற்காகவே காலத்திற்குக் காலம் கவிதைகளை வெளிக்கொணர்கின்றார்கள்.

தென்னை மரத்தில் 6 மாதங்கள் வாழும் ஒரு தென்னம் ஓலையானது தான் வாழ்ந்ததற்கான சுவடதனைத் தன் தாய்மரத்தில் விட்டுச் செல்கின்றது. ஆனால் பல ஆண்டுகள்  இந்தப் பூமியில் வாழக்கூடியமனிதன் எதை விட்டுச் சென்றான் என்ற கேள்வி மனித மனங்களிற் சலனங்களாக இருக்கின்றன. பல நூறு ஆண்டுகளின் பின்னரும் இந்த வழிப்போக்கனின் சுவடுகளைப் பின்பற்றிப் பலர் பாதயாத்திரை செய்வார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அதிகமாக  நீதிமன்றங்களில் "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை" என்ற வாசகங்கள் ஒலிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த நூலினையும் நான் வாசிக்கின்ற போதுகளில் அந்த இரண்டு சொற்களும் என் காதிற்குள் ஆசிரியரது தாரக மந்திரமாகக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன..

மொழி என்பது தொடர்புச் சாதனம் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுடைய கருத்துச் சுதந்திரத்தையும் காவிச் செல்லும் ஒரு பாரிய சக்தி ஆகும். மொழியால் காட்சிப்படுத்தப்படும் ஒரு விடையத்திற்கும், நமது ஆழ்மனத்தில் உறைந்து கிடக்கும் தேடல்களுக்கும் தெடர்புகள் அதிகம் உண்டு. ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது அதில் பார்த்த காட்சிகளில் ஒருசிலவே நம் மனத்திரையில் விழுகின்றது. அந்தக் காட்சியுடன் தொடர்புடைய ஒரு விடையம் எற்கனவே நம் ஆழ்மனத்தில் பதிந்திருந்ததுவே அதற்குக் காரணமாகின்றது. ஆனால் "ஒரு வழிப்போக்கனின் வாக்கமூலம்" காட்சிப் படுத்தும் அத்தனை காட்சிகளும் என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது என்றால் மனிதன் என்ற சமூகப் பிராணியின் தேடல்களுக்கு வழிப்போக்கனின் ஆசிரியர் நல்ல தீனிபோட்டுள்ளார் என்பதையே காட்டி நிற்கின்றது.

இலக்கியத்தில் போதைகொண்டு அடையத் துணிந்த  இலக்குகளில் 34 சிகரங்களை  இயல்பாகவே தாண்டியிருக்கும் இந்த ஆசிரியர் இன்னும் பல சாதனைகள் செய்யவேண்டும் என்பதனைச் சமூகத்தின் அறைகூவலாக இங்கே முன்வைக்கின்றேன்.

"சொல்லுக சொல்லின் பயன் உடைய; சொல்லற்க

சொல்லின் பயன் இலாச் சொல். -(குறள் 200)......

என்ற குறள்கூறும்  வழியில் நின்று இந்தக் கவிஞன் என்ன கூறுகின்றார் என்பதனைப் பார்ப்போம். காதல், மானம், வீரன் என்ற கட்டுக் கோப்பில் வந்த தமிழன் சங்ககாலம் தொட்டு இன்றுவரை ஏனோ தனக்குள் வாளெடுத்துப் பிளவுபட்டான் என்பதனை உண்மை என்று ஒருநிலைப் படுத்தியவர்கள் பழம்தமிழர் என்ற வரலாறு ஒரு பக்கமிருக்கப் போர்க்காலச் சூழலில் அதன் முன்னும், பின்னமாகக் கண்டெடுக்கப்பட்ட பொக்கிசங்கள் மனதைத்தொடும் காட்சிகளாக இங்கே பதிவாக்கப்பட்டிருக்கின்றன.

போர்க் காலத்தில் பங்கருக்குள்ளும், அது ஒய்ந்தகாலங்களில் அகதி முகாம்களிலும் பிறந்து வளர்ந்த குழந்தைகள் சாப்பாடு இல்லாத வேளைகளைத் தங்கள் சாதாரண வாழ்க்கை ஆக்கிய காட்சியை அருமையாகக் கூறியள்ளார்.

அம்மா மெத்தப் பசிக்கிறது

அப்பம் இருந்தால் இப்போ தா

அப்பம் இன்றேல் முத்தம்தா

அதுவே எனக்குப் போதுமம்மா...

விதைகளுக்குள் விருட்சத்தைக்காட்டி; கொம்பாலும் கொடியாலும் தோரணம்கட்டி மகிழ்ந்து, பூக்களுக்கும் கனிகளுக்கும் புத்துயிர் அளித்துத்  தந்தையாய்த்,  தாயாய்த், தெய்வமாய் மரங்களை நேசித்திருக்கின்றார் இந்தக் கவிஞர்.

தாங்கும் தண்டில்

தந்தயைத் துதிப்பேன்

அணைக்கும் கொடிகளில்

அன்னையை நினைப்பேன்

அமைதியின் ஆட்சியில்

இறைவனைக் காண்பேன்.

ஈழத் தமிழர்களுக்குச் சிங்களவர்களால் பிரச்சனை என்றால் இந்தியா வரும் மச்சான் என்று என் பள்ளித் தோழர்களுடன் அந்த நாட்களில் நான் கதைத்து ஆறுதல் அடைந்த நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன். ஏனோ தெரியவில்லை இந்தியா வரவில்லை. இது ஒருவேதனையான உண்மை. ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்தவற்றைக்கூறி இறுதியில் தமிழகத்தை நையப் புடைத்த துணிவு பாராட்டத்தக்கது.

இங்கே

எமது சரித்திரம் செந்நீரால் எழுதப்படுகின்றது.

தமிழகமே இதை நீ

தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொண்டாலே போதும்..(ஓ தமிழகமே)

சமூகப் பின்னணியும், கிராமப்புறப் பின்புலமும் அமைந்து காணப்படுகின்றது "அரசடி வைரவர்" என்ற தலைப்பு. ஒருமுறை அனைவரும் வாசித்துப் பாருங்கள். அதனை இடிக்கவரும் புல்டோசரை நிறுத்துங்கள்

தேசம் முன்னேறுகிறதாம், தெருக்களைப் பெருப்பிக்கின்றார்களள்

புல்டோசர் வருகின்றது பேசாமல் நிற்கின்றாயே!..... (அரசடி வைரவர்)

சங்ககாலத்தில் பகலில் ஒரு பெண் தங்கள் வீடு, கண்ணுக்குத் தெரியும தூரம் வரைதான் வெளியில் செல்லலாம். அதே பெண் இரவு நேரம் என்றால் படலையடி வரைதான் வெளியில் செல்லலாம். அதுவும் ஒரு கூப்பிடு தூரத்திற்குமேல் இருக்கப்படாது. இங்கு "விடுங்கோ ஆரோ வருகினம்" என்ற கிராமியத் தலைப்பும், அதற்குக் கொடுத்திருக்கும் வார்த்தைப் பிரயோகங்களும் படிப்பவர் மனதைப் பாகாக்கி விடுகின்றது.

எப்ப பார்த்தாலும் இழுக்கிறதும், இடுப்பிலை கையை வைக்கிறதும்,

இதுதான் உங்கடை விருப்பம் எண்டால், இப்பவேசொல்லுங்க நான் போறன்....(விடுங்க ஆரோ வருகினம்)

இறைவனைக் கண்டால் என்ற தலைப்பில் 85 கேள்விகளைக் கேட்கத் துணிந்த இந்த மாமனிதரை நான் மதிக்கின்றேன். ஒரு கேள்வியில் திருவள்ளுவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பதனைப் படித்துப் பார்க்குத் அனைவரும் அறிந்து கொள்வார்கள். பெண்களின் கற்பிற்கும் ஒழுக்கத்திகும்  பல அதிகாரங்களை அமைத்த வள்ளுவர்; ஆண்களின் கற்பிற்கு ஒரேயொரு குறளை  மட்டுமே ஆக்கியுள்ளார்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 974

அதாவது ஒரு ஆண்மகன் கற்புள்ள பெண்களைப்போல் ஒழுக்கமாக இருப்பதே அவனுக்குப் பெருமை என்பதே இதன் பொருள்.

இதனையே கவிஞரும் "ஆண்களின் கற்பு உரைத்திடக் கேட்பேன்" என்று இறைவனிடம் உரத்தகுரலில் கேட்பது மிகவும் பாராட்டத் தக்கது.  

நண்பர் ராஜாஜி அவர்கள் போனபிறப்பிலும் கவிஞராகவே இருந்திருக்கின்றார் என்பதைத் தன் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார். மரங்களை ஓரறிவு என்று பழித்தவர்கள் மத்தியில் இவர் மரங்களை நண்பர்களாக்கி நேசித்திருக்கும் பண்பு பாராட்டத்தக்கது.

போன பிறப்பில்

மரங்களைப் பாடாமல்

மாண்டு போனதால்

தேவர்கள் என்னைத்

திருப்பி அனுப்பிவிட்டார்கள்.! (மரங்களை நேசிப்போம்).

போன பிறப்பில் மட்டுமன்றி, நீங்கள் எல்லாப்பிறப்பிலும் கவிஞராக இருக்கவேண்டும் என்பதே என் வேணவாவாகும்.

தொட்ட  இடம் எல்லாம் துலங்குவதுபோல் இவர் கை பட்ட இடமெல்லாம் நூல் முழுக்கத் தளிர்விட்டிருக்கும் புதுமை இவருக்கு எங்கிருந்து கிடைத்த புலமையோ தெரியவில்லை.  

இந்த நூலைத் தலைப்பாகக் கொண்ட "ஒரு வழிப்போக்கனின் வாக்கமூலம்" என்ற பதிவில் சிறிலங்கா அரசியலில் பௌத்ததத்துறவிகளே அரசை ஆழுமை செய்கின்றார்கள் என்பதை மிகவும் நாசூக்காகக் கூறி வாசிப்பவர்களை உணர்வின் விழிம்பிற்கே நகர்த்திச் சென்றிருக்கின்றார் கவிஞர்.

புத்தர்

நீ அரச பதவியைத் துறந்த

துறவறம் பூண்டாய்

ஆனால் இங்கே

துறவறம் பூண்டவர்கள்தான்

அரசியலை நடத்துகின்றார்கள். .... ஆணித்தரமான உண்மை இது.

காளமேகப் புலவர் காலத்துச் சிலேடைகளுக்கு இங்கே பஞ்சமில்லை. கல்யாணம் கட்டியவர் கடிவாளம் எவர் கையில் இருக்கிறது.

தட்டிவான்,  தோசைக்கடை, பருத்தித்துறை வடை, போன்றவை ஜனரஞ்சகப் போர்வைக்குள் இங்கு பத்திரமாகப் பேணப்பட்டுள்ளன.

எந்தக் கவிதையை எடுத்து எப்படிப் பார்த்தாலும் தராசுத் தட்டின் நிறை எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியே இருக்கின்றதன. எதை எடுக்க, எதை எழுத என்பதைத் தீர்மானிப்பதற்கே பல தேர்வுகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. ஒவ்வொரு கவிதைகளாகச் சொல்லி அவற்றின் மூலத்தைத் பதிவாக்கவேண்டும் என்ற அவசியம் இந்தக் கவிதை நூலுக்குத் தேவை இல்லை. அனைத்துத் தலைப்புகளும் எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பொன்னாடை போர்த்து நிற்கின்றன.

நண்பர் ராஜாஜி அவர்களின்  இந்த நூலுக்கு இப்படி ஒரு சிறிய விளக்கத்தை எழுதுவதை நான் பெருமையாக நினைக்கின்றேன். அவர் மேலும் பல பொக்கிசங்களை வெளியிட வேண்டும். அதுமட்டுமன்றி அரிய, பெரிய புலமைப் பரிசில்களையும் அவர் பெறவேண்டும் என்பதனை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மனம்  மகிழ்கின்றேன். வளங்கள் பல பெற்று,  வான் முட்டும் சிறப்படைந்து வாழ்க வாழ்கவென இதயத்தால் வாழ்த்துகின்றேன். வளரி எழுத்துக் கூடத்தினருக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்

கங்கைமகன் 

27.04.2015

No comments:

Post a Comment