நாராயணபுரம் வாசிப்பு அனுபவம்
October 12, 2021
(வாசித்து ரொம்ப நாட்களுக்கு பிறகு)
இந்த நூல் பற்றி அறிமுகத்தில் மூன்று தலைமுறைகளின் கதை என்று சொன்ன ஒரே விடயம் தான் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்கின்ற ஆவலை தூண்டியது. நான் பிறந்த போதே யுத்தமும் பிறந்து விட்ட ஒரு நாட்டில் யுத்தத்துக்கு முந்திய எங்கள் மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை பற்றி பெரிதாக எதுவும் அறிய முடியவில்லை.- ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் படைப்புகள் தவிர அந்தக் காலத்தைப்பற்றிய கதைகள் வாசித்தது இல்லை. கே.டானியல் அவர்களின் கதைகள் வரலாற்று நாவல்களுக்கு ஒப்பான உண்மைகளை சொன்னாலும் ஒரே ஒரு விடயம் தான் மறுபடி மறுபடி சொல்லப்படும். அது தவிர்த்து எங்கள் முன்னோர் எப்படி இருந்தார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவலே நாராயணபுரம் வாசிக்க முதல் காரணம்.
மூன்று தலைமுறைக் கதை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்று தலைமுறை வந்தாலும் அது தேவனின் கதை தான்.ஒரு மெல்லிய சோகத்துடனான காதல் கதை. கதையின் நாயகனின் வாழ்க்கை அவனுக்கு "ன் "விகுதி கொடுத்ததில் இருந்து "ர் " விகுதிக்கு மாற கதை முடிந்து விடுகிறது.அந்தக் கதைக்குள்ளாலேயே நான் தேடிய வாழ்க்கை சொல்லப்பட்டு விடுகிறது. முத்துவேலரின் அறிமுகம், அவர் மகனின் ஏக்கங்கள் அவன் பள்ளிப்பருவத்து வாழ்க்கை,வல்லிபுரம் கிராம மக்களின் கடவுள் நம்பிக்கை, கோவிலொடு இணைந்து இருக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கை எல்லாமே இயல்பாக கதையை ஒட்டி சொல்லப்படுகிறது.அந்த காதல் கதைக்குள்ளேயே சாதி அடக்குமுறையில் இருந்து வயல் வேலைக்கு கூலி ஆட்கள் வந்த காலம் மாறி டிராக்டர் வந்தது வரைக்கும் கதைப்பின்னலுடனேயே நெய்யப்பட்டு விட்டது. அதற்கு சங்கீதத்தை வைத்து சரிகை நெய்து இருக்கிறார் ஆசிரியர்.
முத்துவேலர் என்ன தான் அடாவடியாக தன இஷ்டப்படியே மகனை வளர்த்து அவன் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிராகரித்தாலும் கூட மனதில் கம்பீரமாக தான் நிற்கிறார்.
என்ன சொல்ல. மனிதர்கள் சேடம் இழுத்து செத்த காலத்தில் இருந்து நம் தேசம் அந்த மனிதர்கள் ஷெல்லடி பட்டு செத்த காலத்துக்குள் நகர்ந்து விடுகிறதை யதார்த்தமாகவே காட்டி இருக்கிறார்..இவ்வளவு அம்சங்களையும் சேர்த்து கோர்த்து நெய்து கடைசியில் தேவனை அவன் காதலியுடன் சேர்த்து விடும் போது கொஞ்சம் சந்தோசம் வந்தாலும் திலகத்தின் மரணம் சோகமாகவே இருக்கிறது.மூத்த எழுத்தாளர் அகிலன் அவர்களின் சித்திரப்பாவை நாவல் படித்த போது ஏற்பட்ட உணர்வே நாராயணபுரம் வாசித்து முடிந்ததும் எழுந்தது.
No comments:
Post a Comment