Thursday, June 27, 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே!


நோயினில் நொடியினில் நலிந்தவர் கண்டு
நெஞ்சம் வெடிக்கிறது
நாவினில் நஞ்சினை நனைத்தவர் பேச்சால்
நரம்புகள் துடிக்கிறது.

போரினில் மாண்டவர் புகழினைப் பாடிப்
பொருளினை ஈட்டுகின்றார்
வேருடன் சாய்ந்ததன் காரணம் கேட்டால்
புலிகளைச் சாடுகின்றார்.

சேற்றினில் உழுது சோற்றினை அளித்தவர்
சிறையினில் வாடுகின்றார்
கூற்றினும் மேலாய் கொடுமை புரிந்தவர்
கொழுப்பினில் ஆடுகின்றார்.

போரினால் உழன்று புகலிடம் இழந்தோர்
புழுதியில் மாழுகின்றார்
பாராளு மன்றில் பதவிகள் பெற்றோர்
பொய்யினில் வாழுகின்றார்.

புத்தனைத் தொழுகிற கரங்களில் தமிழன்
குருதி வழிகின்றது
போதியின் மடியில் மானுட நேயம்
புதைந்தே அழிகின்றது.

நீதி பிழைத்தவர் நேர்மை இளைத்தவர்
நாட்டினை ஆளுவதோ
நாயினும் கேடாய் நம்மின மக்கள்
நாளும் மாளுவதோ?

Sunday, June 23, 2013

காதலாகிக் கசிந்து...


மேகங்கள் அனைத்தும் மலையினில் மோதி
மெலிதாய்த் தவழ்கிறது என்
மோகங்கள் அவளின் மார்பினில் மோதி
முகையாய் அவிழ்கிறது.

அவிழ்கிற கூந்தலில் ஒழுகிற நீரலை
இடையினை அணைக்கிறது அவள்
இதழ்களில் துடிக்கும் இளமையின் தாபம்
இதயத்தைப் பிணைக்கிறது.

பிணைந்திடும் போழ்தில் பகிர்ந்திடும் போதை
பொங்கிச் சரிக்கிறது - அவள்
பார்வையில் தெறிக்கும் பருவத்தின் செய்தி
பாயை விரிக்கிறது.

விரிகிற முல்லை விழிகளின் வழியாய்
வீசிடும் மின்னலைகள் வாயின்
வார்த்தைகள் இன்றிக் கண்களின் ஊடே
வழங்கிடும் சொல்லலைகள்.

சொல்லிய தெதுவும் புரிவது இன்றிச்
சேர்ந்திடும் காற்றினிலே வானில்
சிறகினை விரித்துப் பறப்பது தானே
சிறந்தது காதலிலே!

கூடவரும் நிலவு


எங்களூர்க் கடைத்தெருவுக்கு அப்பாவுடன் சின்ன வயதில் பலமுறை போய்வந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவரின் கையைப் பிடித்தபடி அவரின் வேகத்துக்கு இணையாக நடந்திருக்கிறேன். நான் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் என் மனதின் குதூகலம் சுருதி பிசகாமல் கூட வந்திருக்கிறது. போகும்போதும் வரும்போதும் அவர் சொல்லும் கதைகளைக் கேட்டபடி நடப்பது ஒரு இனிமையான அனுபவம். வளர்ந்துவிட்டால் என்னால் தனியே நடந்து கடைக்குப் போகமுடியுமென்றும் வசதி வந்தால் ஒரு சயிக்கிளும் வாங்கித் தருவாரென்றும் அவர் பலமுறை எனக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார். ஆனால் அத்தனை விரைவில் தனியாக இக்கடைத்தெருவுக்குப் போகவேண்டிவருமென அன்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் முன்புபோல் குதூகலத்துடன் அல்ல பத்து வயதும் நிரம்பாத நான் மிகவும் புண்பட்ட மனதோடு!

எங்கள் வீட்டிலிருந்து கடைத்தெரு வரைக்கும் ஒரு கட்டை தூரமாவது இருக்குமென்று அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறென். வழியில் புலோலிச் சிவன் கோயிலும் வேலாயுதம் இங்கிலீஷ் பள்ளிக்கூடமும் இருந்தன. நான் எங்கள் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு சித்தியானதும் மேற்படிப்பை இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துதான் படிக்கப்போகிறேன் என்று என் அப்பா ஏற்கனவே தீர்மானித்திருந்ததால் நான் அத்தெருவால் போகும்போதெல்லாம் இங்கிலீஷ் பள்ளிக்கூடவாசலை ஒரு கோயிலாக நினைத்து மனதுக்குள் வணங்கிக்கோள்வேன். அதேபோல் சிவன் கோயில் மேற்கு வாசலைக் கடக்கும்போதும் மனதுக்குள் சுவாமியை வணங்கத் தவறியதில்லை.

சிவன் கோயில் மேற்கு வீதியோடு கடைத்தெருவும் ஆரம்பிக்கிறது. அங்கே ஒன்றிரண்டு தேனீர்க் கடைகளில் ஈக்கள்தான் நேரத்தோடு வரும் அன்றாட வாடிக்கையாளர்கள் போலிருக்கும். எப்போதாவது கடையின் உள்ளேயும் வெளியேயும் நின்றபடி தேனீர் அருந்துவோரும் பீடி, சுருட்டுப் புகைப்போரும் ஈழ நாடு பத்திரிகையைக் கமக்கட்டுக்குள் செருவிக்கொண்டு ஊர், உலகச் செய்திகளை அலசுவோரும் அக்கடைகளின் உயிரோட்டத்துக்கு ஆணிவேராக இருந்தார்கள். இக்கடைகளைத் தாண்டினால் எப்போதும் கலகலப்பாயிருக்கும் மெத்தைக் கடைச் சந்தி. அந்தச் சந்திக்கு எந்தப் பெயர் வைக்கலாமென்பதை உள்ளுர் வாசிகள் தீர்மானிக்க முன்னரே சந்தியில் நடு நாயகமாக அந்த ஊரின் ஒரேயொரு மெத்தைக் கடை நின்றதால் சந்தியின் பெயரோடு அக்கடையின் பெயரும் இயல்பாகவே இணைத்துக்கொண்டது. நல்லதாய்ப்போயிற்று, ஒருவரும் பிரச்சனை எழுப்பவில்லை.

மெத்தைக் கடைச் சந்தியைத் தாண்டினால் கூப்பிடு தூரத்தில் ஒரு புளிய மரம் சடாய்த்துப்போய் தெரு நீளத்துக்குப் பந்தல் போட்டதுபோல் நின்றது. அதுதான் கடைத் தெருவைத் தமது ஏகபோக ராச்சியமாகக்கொண்ட காகங்கள், குருவிகள், அணில்கள் மற்றும் சிறு சீவராசிகளின் கோட்டையாயிருந்தது. புளிய மரத்துக்குப் பக்கத்தில் தெரு ஓரமாக நிரையில் நின்ற கடைகளில் அப்துல் காதரின் நகைக் கடையுமொன்று. அவர் அக்கடைத் தெருவில் வியாபாரம் தொடங்கிய காலம் எவ்வளவோ பழையது என்பதைத் துல்லியமாகக் காட்டுவதுபோல் வாசல் கூரையில் பதித்திருந்த போர்டில் ‘அப்துல் காதர் தங்கம் வெள்ளி நகைகள் வாங்குமிடம் விற்குமிடம்’ ஆதியாம் எழுத்துகள் அத்தனையும் காலப்போக்கில் சாதாரண கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்துபோக கறள் பிடித்த வெறும் தகரம் மட்டுமே இளித்துக்கொண்டிருந்தது. கடையின் அகன்ற வாசலின் மடிப்புக் கதவுகளும் பிணைச்சல் ஈடாடிப்போய் தள்ளாடியபடி நின்றன. அவற்றை ஒன்றாக மடித்து இருபுறச் சுவரிலும் அறைந்திருந்த ஆணியோடு இழுத்துக் கட்டும் பணியில் எப்போதும் ஒரு இளைக் கயிறு எந்த நேரமும் அறுந்துவிடலாம் என்பதுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். இதையெல்லாம் ஈடுகட்டுவதுபோல் அப்துல் காதரின் புன்முறுவல் பூத்த முகம் வாடிக்கையாளரை வாவென்று இழுக்கும்.

அப்துல் காதரின் கடையில் தொங்கும் போர்டில் அவர் பெயர் மறைந்ததைப் போலவே அவரின் சொந்தப் பெயரும் எங்கள் ஊர் மக்களின் நினைவிலிருந்து காலப்போக்கில் மறைந்துவிட்டது. ஆனால் வெறுமனே ‘காக்கா’ என மட்டுமே அழைக்கப்பட்டுவந்தவர் புளியமரத்தடிக்குப் பக்கத்தில் கடை வைத்திருந்ததால் ‘புளியமரத்தடிக் காக்கா’ என்று சொன்னால்தான் தெரிந்துகொள்ளுமளவுக்குப் பிரசித்தமாகிவிட்டார். எவரையும் வாய்ப் பேச்சால் வாலாயப்படுத்தும் வல்லமை கொண்ட காக்காவின் கடைக்குள் நுழைந்தவர் எதையுமே வாங்காமல் வெளியேறுவாரென்றால் அவர் தபால், தந்திச் சேவகராக அல்லது எனது அப்பாவாகத்தான் இருக்கவேண்டும்.

அப்பாவோடு எப்போது கடைத்தெருவுக்குப் போனாலும் புளியமரத்தடிக் காக்கா கடை வாசலில் ஒருசில நிமிடமாவது செலவழிக்காமல் நாம் வீடு திரும்பியதில்லை. இவர்கள் இருவருக்கிடையிலும் எப்படிச் சினேகிதம் வலுத்தது என்பது பற்றி அப்பா எதுவும் சொன்னதாக நினைவில்லை. ஆனால் சினேகிதமென்றால் அப்படியொரு சினேகிதம். ஆளையாள் கண்டதும் இருவர் முகத்திலும் திடீரெனத் தோன்றும் புளகாங்கிதம் பார்ப்பவர்களுக்குப் புல்லரிப்பை ஏற்படுத்தும்.

புளியமரத்தடிக் காக்கா தீவிர இஸ்லாம் மார்க்கப் பற்றுள்ளவரென்றால் அப்பாவோ வல்லிபுர ஆழ்வார் பக்தர். அவர் கிழக்கு மாகாணத்தில் நான் முன்பு அறிந்திராத சம்மாந்துறைப் பக்கத்திலிருந்து வந்தவர் என்றும் திருமணமாகாமலேயே வாழத் துணிந்தவெரென்றும் அப்பா சொன்னதாக நினைவு. அவர் எங்களூருக்கு வந்த காலத்திலிருந்தே நகை வியாபாரத்தில் ஈடுபட்டவரென்றால் இவர் இங்கிலிஷ்காரன் ஆட்சியிலிருந்து சிங்கள ஆட்சிவரை சிவில் உத்தியோகத்தர் பதவியிலிருந்து 58ஆம் ஆண்டுக் கலவரத்தில் அடிபட்டு ஊருக்கு வந்ததோடு வேலையற்றுப்போனவர். இந்த இரு துருவங்களையும் இணைத்தது வெறும் நட்பாக இருக்கமுடியாது. அதற்கும் மேலாய் ஒரு புரிந்துணர்வாய்த்தான் இருந்திருக்கமுடியுமெனப் பின்னைய காலத்தில்தான் எனக்குத் தெளிவாயிற்று. எத்தனை பேருக்கு இப்படி ஏற்படமுடியும்?

புளியமரத்தடிக் காக்கா நகை வியாபாரியாயிருந்தபோதிலும் நம்பமுடியாத அளவுக்கு நாணயமுள்ளவர். தனது உழைப்பில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை தனது ஊரில் வாழும் ஏழைக் குடும்பங்களின் திருமணங்களுக்கும் அந்த ஊரிலிருந்ததோர் மசூதிக்கும் இடது கைக்குத் தெரியாமல் அள்ளிக் கொடுப்பவர். அப்பாவும் நல்ல மனிதரென்று பெயரெடுத்தவர். இரக்கப்படவேண்டிய இடத்தில் மடியில் இருப்பதையும் கொடுத்துவிட்டு வெறும்கைகளை ஆட்டியபடி குஷாலாக வீட்டுக்கு வருபவர். இந்த இரண்டு போக்குகளும்தான் இருவரையும் இப்படி இணைத்துவைத்ததோ!

அப்பா உத்தியோகத்திலிருந்து தானாகவே விலகிக்கொண்டாரெனக் கருதப்பட்டதால் அவருக்குப் பென்சனும் கொடுக்க மறுத்துவிட்டார்கள். அப்பா அரசாங்கத்துக்கு உழைக்கப்போய் பிறந்த நாட்டிலேயே அகதியாகிக் கப்பல் ஏறி ஊருக்கு வந்ததே வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம். இனி ஊரில் ஏதேனும் தொழில்செய்து சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையைச் சுமந்தபடிதான் வீட்டுக்கு வந்தார். ஆனால் அந்நேரம் ஊரெங்கும் வேலை தொழில் உட்பட எல்லாமே தட்டுப்பாடாக இருந்தது. கொஞ்சக்காலம் கையிலிருந்த சேமிப்பையெல்லாம் கட்டுமட்டாக எல்லாச் செலவுக்கும் எடுத்துக்கொண்டிருந்தார். மலைபோன்ற செல்வமும் இருந்தபடி சாப்பிட்டால் கட்டெறும்பாகிவிடுந்தானே! அப்போதுதான் புளியமரத்தடிக் காக்காவின் யோசனை அவருக்குத் துணை செய்தது. அந்தக் காலத்தில் சிங்கப்பூரும் மலாயாவும் ஒரு நாடாய் இருந்தன. ஆயினும் அது சிங்கப்பூரெனவே நம்மவர்களால்  அழைக்கப்பட்டுவந்தது. அங்கே அப்பாவுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடுமென்ற நம்பிக்கையை அப்பாவிடம் விதைத்தவர் புளியமரத்தடிக் காக்காதான். அவர் கொடுத்த ஊக்கத்தாலும் பண உதவியாலுமே அப்பாவால் சிங்கப்பூருக்குக் கப்பலேற முடிந்தது.

அப்பா பயணம்போவதற்கு முதல் நாள் இரவு என்னையும் அழைத்துக்கொண்டு எங்களூர் முருகன் கோயிலுக்கு வந்தார். கோயில் முன் திண்ணையில் சால்வையை விரித்துவிட்டு என்னையும் பக்கத்தில் படுக்கவைத்தார். அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்று விளங்கிக்கோள்ளும் பக்குவம் எனக்கு அப்போது இருக்கவில்லை. ஆனால் அவரின் மென்மையான கைகளின் அணைப்பில் கட்டுண்டு அடுத்த நிமிடமே நித்திரையாகிவிட்டேன். அடுத்த நாள் காலை தன் கடல் கடந்த பிரயாணத்துக்குப் புறப்பட்டுவிட்டார் அப்பா. நாம் கண்ணீரைத் துடைக்க மறந்து அவர் விமானம் ஏறுவதையே பார்த்துக்கொண்டிருந்தோம். விமானப் படிகளில் ஏறும்போது என்னைப்பார்த்து அவர் கையசைப்பதுபோலிருந்தது. நான் உடனே அப்பாவிடம் ஓடிப்போய் அவரின் மடியிலிருந்து கூடவே பயணம் செய்யவேண்டும்போல் உணர்ந்தேன். அவர் விமானம் ஏறியபிறகும் யன்னலூடாகக் கையசைத்துக்கொண்டிருந்தார். அது போய்வருகிறேன் என்று சொல்வதுபோலிருந்தது கவலைப்படாதீர்களென்று சொல்வதுபோலுமிருந்தது. ஆனால் நானோ அன்று முழுவதும் சாப்பிடாமலே அழுதுகொண்டிருந்தேன். அதன்பின்னர் கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் அந்தக் கடைசி இரவில் கோயில் திண்ணையில் அவர் தந்த மென்மையான அணைப்பை நினைத்துக்கொண்டே தனியனாய்த் தூங்கப்பழகிக்கொண்டேன்.

அப்பா சிங்கப்பூருக்குப் பயணமாகி மூன்று மாதமாகிவிட்டது. அவர் அங்கே புதிய நாட்டில் தனியனாய்ச் சிரமப்பட நாங்கள் இங்கே அவரிடமிருந்து எந்த நேரத்திலும் ஒரு செய்தியாவது வரக்கூடுமென்ற ஆவலில் அன்றாடம் தபால்காரனை வாசலில் காத்திருந்தோம். ஒவ்வொரு நாள் காலையும் சந்தியில் நின்று தபால்காரனைக் கண்டபின்னரே பள்ளிக்குப் போவது அன்று என் வழக்கமாகிவிட்டது.

அப்பா பயணம்போன தினத்தன்று அம்மாவின் கையில் கொடுத்துவிட்டுச் சென்ற ஆறுபது ரூபாவில்தான் இவ்வளவு நாட்களாய் வீட்டிலுள்ள நாலு வயிற்றையும் நிரப்பி என்னையும் என் இரண்டு தங்கைமாரையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாள். அம்மா எப்படிக் கெட்டித்தனமாய் அவ்வளவு காலமும் குடும்பத்தை நடத்தினாள் என்பதை நான் முழுவதும் விளங்கிக் கொள்ளக்கூடியவனாக அன்று இருக்கவில்லை. ஆனால் அம்மா மிகக் கெட்டிக்காரியென்பதும் தன்மானம் உள்ளவள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரிந்ததுதான். இல்லாவிடின் இனிக் கையில் செலவுக்கு ஒரு சதம்கூட இல்லையேயென்று கண்டபோது உறவினரிடமோ கிராமத்துக் கடைக்காரனிடமோ கடன் கேட்க விரும்பாமல் காதில் கொழுவியிருந்த பவுன் குச்சுகளைக் கழற்றி ஏதேனும் நகைக் கடையில் கொடுத்து காசை வாங்கி வா, மகனே என்று கடைத்தெருவுக்குத் தனியாய்ப்போய்ப் பழக்கமில்லாத என்னை அனுப்புவாளா? வறுமை எவ்வளவு கொடியது. அதுவும் இளமையில் வறுமை இன்னும் கொடியது!

மனம் முழுவதும் தயக்கமும் கையில் பெறுமதியான பொருளைத் துணையேதுமில்லாமல் கொண்டு செல்கிறேனேயென்ற பயமும் சூழ்ந்திருந்தபோதிலும் கூடவே அப்பா என்னுடன் வருகிறார் என்ற உணர்வு மேலிட்டதால் வெளியில் கொஞ்சம் உசாராகவே நடந்து கடைத்தெருவுக்குச் சென்றேன்.

ஒவ்வொரு நகைக்கடையையும் அன்றுதான் கண்டதுபோன்ற அதிசயத்துடன் பார்த்துக்கொண்டு நடந்து சென்றேனேயன்றி ஒன்றன் வாசலிலும் ஏற எனக்குத் துணிவு வரவில்லை. கடைக்காரர்களுக்கும் விஷயம் விளங்கியிருக்கவேண்டும். என்றாலும் என்னைப்போன்ற சிறுவனுடன் வியாபாரம் செய்ய விரும்பாதவர்கள்போல் எதுவும் பெசாதிருந்தார்கள். நான் மெத்தைக்கடைச் சந்தியைத் தாண்டி வந்தபோதுதான் புளியமரத்தடிக் காக்காவின் கடை நினைவுக்கு வந்தது. ஆனால் அவரிடம் மட்டும் போய் நகையைக் காட்டாதே என்று அம்மா வழிக்குவழி சொன்னது மனதில் உறுத்தியது. ஆனால் விதி வேறு விதமாக முடிவு எடுத்திருக்கவேண்டும். அவருடைய கடையை நான் தாண்டி நடந்தபோது என்னை அவர் பெயர் சொல்லிக்கூப்பிட்டது கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது அவர் எல்லாம் விளங்கிக் கொண்டவர்போல் வாசல் படியில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார். எனக்குப் பொய்சொல்லிப் பழக்கமில்லை. அதுவும் இவருக்கு முன்னால் அவசரத்துக்குக்கூடச் சொல்லமுடியாது. அப்பாவுடன் இவரின் கடைக்கு வந்தபோதெல்லாம் அவர்கள் இருவரும் பேசுவதைக் கவனித்துக்கொண்டு இடைக்கிடை காக்காவும் அப்பாவும் கேட்கிற கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பேனேயன்றி அதற்கு மேலாய் வாய் திறக்க எனக்குச் சந்தர்ப்பமே கிடைத்ததில்லை. ஆனால் இப்போது அவரின் கடை வாசல் படியில் ஏறி நின்றதும் பேசுவதற்குப் பதிலாக அழுகையே அடக்கமுயன்றதையும் மீறிக் குமுறிக்கொண்டு எழுந்தது. அழுகையின் மத்தியில் அன்று நான் கடைக்கு வந்த காரணத்தை அவரிடம் அப்படியே ஒப்புவித்துவிட்டேன். இவருக்கு நான் எப்படிப் பொய் சொல்லுவேன். அது அப்பாவின் முன்னால் பொய் பேசுவது போன்றதல்லவா?

நான் கடைத்தெருவுக்கு வந்த காரணத்தைக் கேட்டறிந்ததும் என்னிடமிருந்த நகையைப் பாராமலேயே கையில் இரண்டு ரூபாவைத் தந்து என்னை வழியனுப்பிவைத்தார் புளியமரத்தடிக் காக்கா. வீட்டுக்குத் திரும்பிவரும் வழியெல்லாம் என் மனம் கடைக்கு வந்தபோதிலும் பார்க்க இன்னும் பாரமாக இருந்ததை உணர்ந்தேன். அம்மா என்ன சொல்வாளோ என்ற பயம் ஒருபுறம் அப்பாவின் கடிதம் வந்ததா என காக்கா அக்கறையுடன் கேட்டதற்கு நான் அழுகையினூடே “இலை”யென்று சொன்னபதில் இன்னொரு புறமுமாக கையில் காசையும் நகையையும் கூடவே வேதனையையும் சேர்த்துச் சுமந்தபடி வீடு சென்றேன். அம்மா என் கண்களைத் துடைத்துச் சமாதானப்படுத்தியபோது அப்பாவை நினைத்தே நான் அழுதேன் என்பது தெளிவாகி அன்று முழுவதும் வெளியே விளையாடக்கூடப்போகாமல் வீட்டினுள்ளேயே அடைபட்டுக்கிடந்தேன்.

அடுத்த கிழமையே அப்பாவின் முதல் கடிதம் வந்துசேர்ந்தது. வீட்டில் ஒரே கொண்டாட்டம். தான் சுகமாய் இருப்பதாகவும் ஒரு கம்பெனியில் வேலையில் சேர்ந்திருப்பதாகவும் எழுதியிருந்தார். கையோடு, கடைக்குப்போய்க் காக்காவிடம் தன் சுகம்பற்றிச் சொல்லும்படியும் அப்பா தன் கடிதத்தில் கேட்டிருந்தார்.

அன்று மாலையே காக்காவின் கடைக்குப்போய் அவரைக்கண்டு அப்பாவிடமிருந்து கடிதம் வந்த செய்தியைச் சொன்னபோது நான் திடீரென இளைஞனாகிவிட்டேன்போல் உணர்ந்தேன். அன்று நகையை விற்கப்போனபோது அவரோடு தனிப்படப் பேசியதிலிருந்ததன் பின்னர் வந்த பதினான்கு ஆண்டுகள் எனக்கு அவரே அப்பாவைப்போல் வழிகாட்டியாயிருந்ததற்கு அந்தச் சந்திப்பே காரணமாயிற்று. அதன்பிறகு அவரைச் சந்தித்த ஒவ்வொரு முறையும் அப்பாவே அவர் மூலமாக என்னுடன் பேசினார் என்பதை அப்பா அனுப்பிய கடிதங்களை எனக்குக் காட்டியபோது விளங்கியது.

அப்பா ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்கு விடுமுறையில் வந்து எம்மோடு ஒரிரு மாதங்கள் மனதில் அன்பையும் வாழ்வில் நம்பிக்கையையும் விதைத்துவிட்டு மீண்டும் மலாயா சென்றார். அந்த ஓரிரு மாதங்களில் வீட்டைப் புதிதாகக் கட்டி எனது மேற்படிப்புச் செலவுகளுக்கும் ஆயத்தங்கள் செய்துவிட்டுச் சென்றார். அந்நாட்களில் வீட்டில் அவரைக் காணாவிட்டால் புளியமரத்தடிக் காக்காவுடன் போழுது போக்குகிறாரென்றே நாம் தெரிந்துகொண்டோம். இந்த இரு உள்ளங்களும் உடையும்படியாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்பா மீண்டும் மலாயா போய் இரண்டு ஆண்டுகளில் புளியமரத்தடிக் காக்காவின் கடையைக் கள்வர்கள் உடைத்து அங்கிருந்த பெறுமதியான அத்தனையையும் துடைத்துச் சென்றுவிட்டார்கள். அன்றிலிருந்து காக்கா படுக்கையில் விழுந்தவர்போலாகிவிட்டார். அப்பாவும் ஊரில் இல்லாததால் அவரின் நெஞ்சுரம் குன்றிப்போனது கூடவே உடல் நலமும் குன்றிப்போனது. அதன்பிறகு சிலகாலமே அவரால் தாக்குப்பிடிக்கமுடிந்தது. காக்கா காலமான செய்தியை அறிந்ததும் உடனே ஊருக்கு வருவதற்குத்தான் அப்பா முயன்றார். ஆனால் அது இயலாமற்போய்விட்டது. அதன் பின்னர் அப்பா ஊருக்கு வர ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தபோது அவரின் பெயரில் புளியமரத்தடிக் காக்காவின் சட்டத்தரணி எழுதிய கடிதமொன்று எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்த்து. சீல் வைத்த கடிதத்தைத் திறக்கப் பயந்து அவர் வரும்வரையும் காத்திருந்தோம். அப்பா இறுதியில் வந்து சேர்ந்தார்.

ப்பா மலாயாவிலிருந்து நாட்டுக்குத் திரும்பிவந்து இன்றோடு ஒரு கிழமையாகிவிட்டது. அவர் இனித் திரும்பவும் மலாயா போகமாட்டார் என்ற செய்திதான் அவர் நம்மிடம் வந்த செய்தியிலும்பார்க்க எவ்வளவோ இனிமையாயிருந்தது. அன்றிலிருந்து இரவு பகலாக எங்கள் வீட்டில் உறவினர்களும் நண்பர்களுமாக அவரைக் காண்பதற்கு வந்ததால் வீடு எந்நேரமும் களைகட்டியிருந்தது. கண்டியில் படித்துக்கொண்டிருந்த நானும் ஒரு கிழமையாவது அவருடன் நிற்பதெனத் தீர்மானித்து வந்திருந்தேன். அப்பா தன்னைப்பற்றியும் மலாயாவில் தன் வாழ்க்கைபற்றியும் பேசியதிலும் பார்க்க என்னையும் என் படிப்பையும் பற்றியே எல்லாருடனும் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். நான் நினைத்திருந்த அப்பாவிலும் பார்க்க இன்னும் கூடுதலாக அன்பைப் பொழியும் ஜீவனையே அப்போது அவரிடம் கண்டேன். அவர் காட்டிய பாசத்தால் எல்லார் கண்ணும் என்மீது படருவதைத் தாங்கமுடியாமல் நான் அங்கிருந்து நழுவவேண்டியதாயிற்று.

அப்பா ஊருக்கு வந்து சேர்ந்த அன்று பின்னேரம் எங்கள் எல்லாரையும் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோனார். அம்மாவையும் தங்கைகளையும் கோயிலைச் சுற்றிக் கும்பிட அனுப்பிவிட்டு அன்னை அருகில் இருத்தித் தன் கைகளோடு என்கையைப் பிணைத்துக்கோண்டார். வயதுவந்த என்னுடன் இவ்வளவு நெருக்கமாய் அன்பு காட்டுவதைக் கோயிலுக்கு வந்தவர்கள் கவனித்துச் சென்றதை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இவ்வளவு நெருக்கத்தில் எதையோ முக்கியமாக என்னிடம் சொல்லப்போகிறாரென்ற ஆவலை என்னுள் மூட்டிவிட்டு கடைசிவரை எதுவும் சொல்லாமலே என்னை எனக்குள் பேசவைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மென்மையான கையின் அணைப்பு “மோனை, உனக்குப் பக்கத்திலையிருந்து கதைச்சு எத்தினை வருசமாய்ப் போய்ச்சுது” என்று அவர் மனம் முழுவதும் வெப்பியாரம் பொங்கச் சொல்வதுபோலிருந்தது. நானும் அதை ஆமோதிப்பதுபோல் தலையைக் குனிந்தபடி மௌனமாயிருந்தேன்.

சிறிது நேரத்தில் அம்மாவும் தங்கைமாரும் திரும்பிவந்து எம்முடன் இணைந்துகொண்டார்கள். தாங்கள் வீதியைச் சுற்றிவிட்டு வந்தபோது அப்பாவும் நானும் தியானத்தில் இருந்தோமென்று தங்கைகள் சொல்லிச் சிரித்தபோது எனக்கு வெட்கப்படுவதற்குப் பதிலாகப் பெருமையாயிருந்தது. நிச்சயம் தியானம்தான். அப்பாவின் அரவணைப்புக்கு இத்தனை காலமும் ஏங்கிக்கிடந்தவன் மௌனமாய் அவரின் கருணை மிக்க உள்ளத்தோடு எங்கள் கைகளின் பிணைப்பினூடே பேசிக் கொண்டிருந்தேனென்றால் அதுவும் ஒருவகைக்குத் தியானம்தான்.

அப்பாவே என்னைச் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வில் இன்று காலையும் நீண்ட நேரம் நித்திரையாகிவிட்டேன். நித்திரையில் என் தலையை யாரோ தடவுவதுபோன்ற அருட்டுணர்வில் கண்களை விழித்துப் பார்த்தேன். அப்பாவேதான். “காலை ஒரு இடத்துக்குப் போகவேண்டுமென்று நேற்றுச் சொன்னேனே, மோனை, வெளிக்கிடவேண்டாமே?” என்றார். நேற்றுக் கோயிலடியில், “காலை கடைத் தெருவுக்குப் போய்வருவோம், கையோடு லோயரையும் கண்டுவரலாம்.” என்று சொன்னது துப்பரவாய் மறந்தே போய்விட்டது. நான் வெட்கத்தோடு எழும்பி வெளிக்கிட்டதும் இருவருமாய்ப் புறப்பட்டோம்.. நாம் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே சிறுவயதில் அவரின் கையைப் பிடித்தபடி நடந்துபோன நாட்கள் படமாய் என் கண்முன் விரிந்தன. இப்போது அவருக்கு அறுபது வயதாகிவிட்டது. ஆனாலும் ஒழுங்கான வாழ்க்கை முறையும் இறை வழிபாடும் அவரை இப்போதும் இளமையாகவே வைத்திருந்தன. எனது சின்ன வயதில் அவருடன் கூட நடந்துபோன சமயங்களில் கடைக்குப் போகிறேனேயென்ற மகிழ்ச்சியும் பரபரப்புமே என்னிடம் கரை புரண்டு ஓடியது நினைவிருக்கிறது. ஆனால் இன்றோ அவருக்குச் சமமாக மட்டுமல்ல அவரின் வழிகாட்டலில் அவரைப்போன்றே வளர்ந்த பிள்ளையாக அவருடன்கூட நடக்கின்றேனேயென்ற உணர்வே என்னைப் பெருமிதத்தில் ஆழ்த்தியது.

கடைத்தெருவுக்கு வந்ததும் பூட்டிக்கிடந்த புளியமரத்தடிக் காக்காவுடைய கடையின் எதிர்க்கரையில் நின்றபடி அதைச் சிறிது நேரம் மௌனமாய் நோக்கியபடி நின்றார் அப்பா. பின்னர் என்பக்கம் திரும்பி, “நான் ஊரிலை இல்லாத வேளை அவர் உன்னைக் கண்டு கதைத்ததெல்லாத்தையும் எனக்கு எழுதிக்கொண்டிருந்தார், தெரியுமோ?” எனக் கேட்டார் அப்பா. “நானும் அவரைக் கண்டு கதைத்ததையெல்லாம் உங்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேனே, அப்பா.” என்றேன். “அதுதான் உண்மையான அன்பும் மரியாதையும்.” என்று சொல்லிவிட்டு அப்பா என்னப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்.

புளியமரத்தடிக் காக்காவுக்கு அப்பா கொடுக்கவேண்டிய கடனையெல்லாம் அவர் கேளாமலே காலத்தோடு கொடுத்துத் தீர்த்துவிட்டார் என்பதை அவர் வீட்டுக்கு அனுப்பிய கடிதங்களின் மூலம் அறிந்திருந்தேன். காக்கா விரும்பிய சுவிஸ் கைக்கடிகாரம், பார்க்கர் பேனா போன்ற பொருட்களையும் அவ்வப்போது வருகிறவர்கள்மூலம் கொடுத்தனுப்பி அவருடனுள்ள தன் நட்பையும் விசுவாசத்தையும் அப்பா காட்டத் தவறவில்லை. என்றாலும் காக்கா தனது சட்டத்தரணிக்கு எழுதிக்கொடுத்த கடிதத்தில் என்ன செய்தி இருக்குமோவென நான் மூளையைக் குளப்பிக்கொண்டிருந்தேன். புளியமரத்தடிக் காக்கா காலமாகமுன் அப்பாவிடமிருந்து நிலுவையாய் எதேனும் காசு பணம் வரவிலிருக்கின்றதென எழுதிவைத்திருக்கலாம். அப்பா ஊரில் இல்லாதபடியால் இதைப்பற்றி எழுத்தில் செய்வதுதான் முறையென எண்ணி அப்படிச் செய்திருக்கலாம். என்ன அதிர்ச்சியான செய்தி நம்மைக் காத்திருக்கிறதோவென்ற யோசனையில் மூழ்கியபடி நான் நடந்துசெல்ல அப்பாவோ மிக அமைதியாக காலம்சென்ற தன் நண்பனின் விருப்பத்தைக் கரும சிரத்தையுடன் நிறைவேற்றச் செல்வதுபோன்று வந்துகொண்டிருந்தார்.

எங்களையும் அப்பா நீட்டிய கடிதத்தையும் கண்ட லோயர் அப்பா யாரென அனுமானித்துக் கொண்டவர்போல் உடனேயே விஷயத்துக்கு இறங்கிவிட்டார். அவர் தயாராக் வைத்திருந்த உறுதிபோன்ற பத்திரத்தைக் கையிலெடுத்து “இதோ பாருங்கோ, காலமான அப்துல் காதர் தனது கடைசிக் காலத்தில் எழுதிச் சட்டப்படி உறுதிப்படுத்தின இறுதி விருப்பாவணம். தன் இறப்பின்பின்னர் தன் பெயரில் வங்கிப் பாதுகாப்பிலிருந்த பணத்தில் உங்கள் பெயருக்கு நன்கொடையாக இருபத்தையாயிரம் ரூபாவும் மிகுதியை அவரின் ஊரிலுள்ள மசூதிக்கும் சேரவேண்டுமென எழுதிவைத்திருக்கிறார்.” என்று எங்களைப் பார்த்தபடி கூறிவிட்டுச் சிறிது நேரம் சிந்திக்க அவகாசம் வேண்டுமென எண்ணியவர்போன்று சில விநாடிகள் அமைதியாயிருந்தார். நாமோ புளியமரத்தடிக் காக்கா எழுதிவைத்த செய்தியை துப்பரவாக நம்பமுடியாதவர்கள்போல் பேச்சற்று நின்றோம். இருபத்தாயிரம் ரூபா எவ்வளவு பெரிய தொகைப் பணம்! நாலு பரப்பு றோட்டுக் காணியின் பெறுமதியல்லவா? அப்பா தனக்கு ஏற்பட்ட மலைப்பை வெளியே காட்டிக்கொள்ளாது சிந்தனையில் ஆழ்ந்தார். நான் அவரின் கையைப் பற்றியபடியே லோயர் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்பதற்கு ஆவலாயிருந்தேன்.

லோயர் தொடர்ந்தார், “துரதிஷ்டவசமாக அவரின் கடை கொள்ளையடிக்கப்பட்டதாலும் கடைசி நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட பணமுடையாலும் வங்கியிருப்பு பெரும்பாலும் குறைந்துவிட்டதென்று வங்கியிலிருந்து கிடைத்த அறிக்கை சொல்கிறது. அதன்படி இருபதேழாயிரச் சொச்சமுமே அவரின் பெயரில் நிலுவையிலிருந்தது. இத்தொகை உறுதிச் செலவு, எனது கட்டணம் ஆகிய செலவுகளெல்லாம் கழிந்தபிறகு வந்த தொகை. நீங்கள் அப்துல் காதருடன் பலகாலம் நட்பாயிருந்தீர்கள் என்று அவரின் விருப்பாவணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் காரணத்தினாலும் உங்கள்மீது இயல்பாகவேயுள்ள அன்பினாலும் நன்றியினாலும் விசுவாசத்தினாலுமே உங்கள் பெயருக்கு இந்த நன்கைடையை எழுதத் துணிந்தாரென்று காலம் சென்ற அப்துல் காதர் மிகத் தெளிவான வாசகத்தால் இந்த ஆவணத்தில் சொல்லியிருக்கிறார். அவற்றில் மயக்கமோ குழப்பமோ எதுவுமில்லை. ஆனபடியால் உங்கள் வங்கிக் கணக்குக்கு இத் தொகையை உடனடியாக மாற்றி எனது நன்னம்பிக்கைப் பொறுப்பைச் சட்டப்படி நிறைவேற்றவேண்டிய கடமை எனக்கிருக்கிறது” என்று சொல்லி முடித்தார்.

நானென்றால் இத்தனைக்கும் காக்காவின் பெருந்தன்மையை எண்ணி மனம்விட்டு அழுதிருப்பேன். நான் படிப்பை முடித்து வேலைக்குப் போகும் வரைக்கும் மட்டுமல்லாமல் தங்கைமாரின் திருணத்துக்கும் இந்தப் பணம் எவ்வளவு பெரும் உதவியாய் இருக்கப்போகிறதென்றே அவசரமாக எண்ணினேன். ஆனால் அதேவேளை அப்பாவின் மனதில் என்ன சிந்தனை ஓடுகிறதோவென்று அறிந்துகோள்ளமுடியாமல் அவரின் முகத்தையே பார்த்தபடி நின்றேன். அப்பா தன் மனதில் பட்டதைச் சொல்ல அதிக நேரம் எடுக்கவில்லை. “காக்கா போனபோது நான் பக்கத்தில் நிற்கமுடியாமல் போய்விட்டதேயென்ற கவலைதான் என் மனதில் இப்போது பெரிய பாரமாயிருக்கு. இதைவிட வேறு கவலையோ யோசனையோ எனக்கில்லை. ஐயா, அவர் எனக்கும் என் குடும்பத்துக்கும் செய்த உதவிகளுக்குப் பெறுமதியே கிடையாது. இப்போது இப்படியொரு பெரும் பாரத்தை என் தலையில் இறக்கிவிட்டுப் போயிருக்கிறார் பாருங்கள். இதுக்கு நான் பாத்திரவாளியில்லையென்று என் மனம் சொல்லுது. எனக்குக் கொடுக்கச்சொல்லி அவர் எழுதியிருக்கிற தொகையை விட்டால் அவர் விரும்பின மசூதிக்குக் கொடுக்க எஞ்சியிருக்கிற தொகை கொஞ்சம்தான். ஆனபடியால் எனக்கு அவர் கொடுக்கும்படி எழுதிய தொகையையும் அவருக்கு அந்த மசூதியின் பெயருக்கே அவருடைய பெயரில் நன்கொடையாக எழுதிவிடுங்கள். தேவையான பத்திரங்களை முடியுங்கள் உங்கள் நொத்தாரிசுக் கூலிக்கு நான் ஒழுங்குபண்ணுகிறேன்” என்று கோயில் வாசலில் நின்று பிரார்த்தனை செய்கிறவர்போல் ஒவ்வொரு சொல்லையும் மனமுருகச் சொன்னார். அப்போது அவரின் முகத்தில் தோன்றி மறைந்த ஒளியில் நான் கட்டுண்டு நின்றேன்.


அப்பாவும் நானும் வீட்டுக்குத் திரும்பி நடந்தபோது சின்னவயதில் என்னை வழி நடத்திச்சென்ற அப்பாவின் கையைப்பிடித்தபடி அவரின் வேகத்துக்கு இணையாகச் சுருதி பிசகாத குதூகலத்தோடு நடந்ததுபோல் மனம் பரவசமாயிருந்தது.

Tuesday, June 4, 2013

விழிப்புகள்



நான் சந்தியில் திரும்பியபோது “பொதேலென்று” எதுவோ பாறி விழுந்த பலத்த ஓசையை மட்டும் கேட்டதை அறிவேன். எது அப்படி விழவேண்டிவந்தது என்பதை அறியேன்.

பிறகு தெரிந்தது. விழுந்தது ஒரு மரம். புளியமரம். 57ப் புயலுக்கு அசையாமல் நின்ற மரம் நான் சந்தியில் திரும்பியபோது மாத்திரம் விழுந்தது.

அது ஒரு Blind Corner. அது எனக்கு முன்பே தெரியும். ஆனால் அதை அறிவிக்கும் இரும்புப் பலகை இப்போது எப்படித் தொலைந்துபோனது என்பது பற்றித் தெரியாது.

சந்தியில் இடப்பக்கமாகத் திரும்பிவிட்டால் றோட்டின் ஓரமாக ஒரு பெரிய புளியமரம் நிற்பதைக் காணலாம். வளைவிலே திரும்புவதற்குமுன் அதைக் கண்டுகொள்ளமுடியாத அளவுக்கு ஆகாயத்தை மறைக்கும் இன்னும் வேறு சாலையோர மரங்கள். ஆகவே புளியமரம் விழுந்ததற்கு அந்தத் திருப்பமும் அதில் நான் திரும்பியதும்தான் காரணமாக இருக்கவேண்டும்.

அப்போது நான் நடந்து வந்தேனா ஸ்கூட்டரில் வந்தேனா என்பது எனக்குச் சரியான ஞாபகம் இல்லை. இந்த இரண்டில் ஏதோவொரு முறையில்தான் வந்திருப்பேன். ஆனாலும் நான் சந்தியில் திரும்புவதற்கும் புளியமரம் விழுவதற்கும் அல்லது புளியமரம் விழுவதற்கும் நான் சந்தியில் திரும்புவதற்கும் என்ன தொடர்பு?

அதுதான் எனக்குத் தெரியவில்லை. புளியமரம் விழுந்ததுமட்டும் உண்மை.

அந்தப் புளியமரத்தை நான் பலமுறை கண்டிருக்கிறேன். கடைகள், கிட்டங்கிகள் நடுவே சின்னதொரு வெட்டை. அதன் நடுநாயகமாக அந்த மரம். அதன் நிழலில் நடக்கும் வைக்கல் வியாபாரம். அதையடுத்துத் தொட்டம் தொட்டமாகக் கடைகள், கார் கராஜ்கள்.

அந்தத் தெருவில் இன்னும் நாகரிய வாடை அதிகம் வீசாததற்கு அங்கே அந்தப் புளியமரம் நிற்பதுதான் காரணமாக இருக்கவேண்டும். அது விழுந்துவிட்டபிறகு அங்கு நாகரிகம் வந்துவிடுமோ என்பது பற்றி எனக்கு நினைக்கத் தோன்றவில்லை. நினைப்பதற்கு ஏது அவகாசம்?

புளியமரத்தின் பரிதாபகரமான தோற்றத்தில் நான் கதிகலங்கிப்போய் நின்றேன். பூமியைத் தழுவ முயல்வதுபோல்வது போன்று அது நெடுஞ்சாண்கிடையாக விழுந்துகிடந்தது. நிலத்தில் இருந்து பிட்டுக்கொண்டு கிளம்பிய அதன் வேர்கள் ஆகாயத்தைப் பார்த்து வன்மத்துடன் சூழுரைப்பதுபோல் பயங்கரமாய்ச் சிலிர்த்தபடி நின்றன. மரத்தின் கொப்புகள், கிளைகளெல்லாம் விழுந்த வேகத்தில் அடிபட்டுச் சிதறுண்டு கிடந்தன. அவற்றுள் கூடுகட்டி வாழ்ந்த பட்சிகள் அதிர்ச்சியால் அலறியபடி தப்பிப் பறந்தன. நான் அந்தக் கிளைகளின் அருகில் சென்று அனுதாபத்துடன் நோக்கினேன். ஒடிந்த சிறிய கிளையொன்று என் காலடியில் சிக்குண்டு கிடந்தது. அதனைக் குனிந்து கையால் எடுக்க முயன்றேன். என்னால் அதை அசைக்கவே முடியவில்லை. ஒரு பெரிய கொப்பு எவ்வளவு சுமையாயிருக்குமோ அவ்வளவு சுமை. வியப்பால் என் நாடித்துடிப்புகள் விரைவாய் அதிர்ந்தன. திரும்பவும் முயன்று முயன்று முடியாமல் களைத்துச் சோர்ந்தேன். துடிப்புகள் படிப்படியாய் ஒடுங்குவதை உணர்ந்தேன். உடலெங்கும் வியர்வை வெள்ளமாய்ப் பெருகிற்று. கைக்குட்டையை எடுத்துத் துடைத்துக்கொள்ளக்கூடச் சக்தியற்று என் உடல் செயலற்று ஓய்ந்த்து. இடையில் யாரோ உரிமையோடு வந்து என் முகத்தைத் துடைப்பதுபோலிருந்தது. கரத்தின் தீண்டுதலில் உணர்வுகள் செயலுறக் கனவுநிலை துண்டிக்க விழிப்புக்கொண்டேன்.

என் உடல் கட்டிலில் கிடந்தது; என் பக்கத்தில் அவள் நின்றிருந்தாள்.

என் உடம்பில் ஏதோ சுமைகளெல்லாம் அழுந்திக்கொண்டிருந்தன. கைகளை மெல்ல அசைப்பதில்தான் நான் இதோ இருக்கிறேன் என்பதை நம்பமுடிந்தது. இடிந்த விழுந்த பாலமொன்றின்கீழ் அகப்பட்டுக்கொண்டவன்போல் உடம்பின் தசை நார்கள் அத்தனையும் பிழிபடுவதைச் சகிக்க இயலாது துன்புற்றேன். துன்புறும் ஒவ்வொரு கணமும் அவள் அருகில் இல்லாதிருந்திருந்தால் வேதனையின் விஸ்வரூப தரிசனமாக இருந்திருக்கும். அவளது உடை எனக்குச் சிறிது பரிச்சயமான உடை. அவ்விடத்தின் வாசனை எனது அனுமானத்தை நிரூபித்த்து.

அது ஆஸ்பத்திரி, அவள் பணிப்பெண்.

அவள் இளம் சூடான் நீரினால் என் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள். கழுத்து, தோள்கள், நெஞ்சு, இடுப்பு எங்கும் அவளின் கைகள் சுதந்திரமாக ஊர்ந்தன. பின்னர் அவள் காய்ந்த மென்மையான துணியினால் முன்பு துடைத்த இடங்களின்மீதான நீர்ப்பசையை ஒற்றி எடுத்தாள். எனக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்பட்டுவிடக்கூடாதேயென அஞ்சியவள்போல் மிகப் பக்குவமாகப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

எனது கட்டில் அவளின் இடையளவு உயரத்திலிருந்தது. நான் மிகச் சிரமத்துடன தலையணையில் தலையைச் சாய்த்துப் பார்வையை வீசியபோது இடுப்புக்கு மேற்பகுதிகளை மட்டுமே அசைத்துப் பின்னணி இசையின்றி ஆடும் புதுரகமான நடனத்தின் முத்திரைகளை அவள் அபிநயிப்பது போலிருந்தது.

அவளின் முகம் மிக்க மலர்ச்சியோடு காணப்பட்டது.  காலைப் பொழுதில் இயற்கையாகவே ஒரு பெண்ணின் முகத்தில் தோன்றும் மலர்ச்சியை அவள் முகத்தில் பரிபூரணமாகக் கண்டு அனுபவித்தேன். நடுவே சிறிது திறந்திருந்த இதழ்களுக்கிடையே முற்றாத இளம் மாதுளம் பருப்புகள் போன்ற பற்கள் ஒளிர்ந்தன. அவள் குனிந்தபோது இளம் மார்பகங்கள் என் கண்ணூடாக என்னுள் உருகி வழிந்தன. என் கண்கள் நிலைகொள்ளாமல் அவள்மீது பரவியபோதெல்லாம் அவள் முகத்தில் முறுவலின் ரேகைகள் படரக் கன்னங்கள் செம்மை பூத்தன.  படிய வாரி அள்ளிமுடித்த கூந்தலில் ஒருசிறு கற்றை விலகிக் காற்றடித்த போதெல்லாம் அவளின் இதழ்களைத் தடவி ஏதோ கேட்டது . உடலை ஒட்டிய சீருடை அவளுடைய இளமையை அடக்கமாகத் தெரிவித்துக் கொண்டிருந்தது. அவளது விழிகளைச் சந்தித்த ஒரு விநாடிப் பொழுதில் எனக்குள் ஒரு அற்புத பிரமிப்புச் சுடர்விடுவதை உணர்ந்தேன்.

அதுவரை அவள் எதுவும் பேசாமலே என்னையே எனக்குள் பேசவைத்துக்கொண்டிருந்தாள்.

என் நெற்றியில் அவள் கையை வைத்ததும் நான் கண்களை மூடிக்கொண்டேன். அவளின் மெல்லிய, பசுமையான கைவிரல்களை மிக அருகில் பார்க்கவே எனக்குக் கூச்சமாயிருந்தது. நான் கண்ணை விழித்தபோது அவள் அங்கிருக்கவில்லை. நான் தனியனானபோதுதான் அந்தக் கேள்வி என்னுள் எழுந்தது.

“எந்த நிகழ்ச்சியின் ஏதுவாய் நான் இங்கு வந்தேன்”?

என்னை இப்படிக் கட்டிலோடு இணைத்துவிட்ட சம்பவம் நிச்சயம் விபத்தாகத்தான் இருக்கவேண்டும். விபத்தில்லாமல் வேறென்ன? விபத்துத்தான்! அது எப்படி ஏற்பட்டது? நினைவுக்கு எட்டும் கடைசி நாளின் சம்பவங்களைச் சரங்களாய்க்கோர்த்துத் தொடர்புகளை உருவாக்க முயன்றேன். சொல்லி வைத்ததுபோல் அந்த நிகழ்ச்சி திரை படிப்படியாக விலக யன்னலூடாக வானத்தின் தோற்றம் விரிவடைவதுபோல் நினைவில் படர்ந்தன.

நான் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருக்கிறேன். சந்தியில் இடப்பக்கமாகத் திரும்பவேண்டும். இப்போதைய வேகத்தைக் குறைத்து 20 பாகை சரிவில் வளைவில் திரும்புகிறேன். திரும்பி ஒருசில அடிகள் தூரத்துக்கு மட்டும் நிதானம் என் கைகளுக்குக் கீழ்ப்படிகிறது. அடுத்த கணத்தில் பாதையை முழுக்க அடைத்தபடி எதிரே சீறிவரும் லொறியைத்தான் காண்கிறேன். அதைக் கண்டு வெருண்டதுபோல் நிதானம் மேலும் அடங்கமறுக்கிறது. எப்படியோ ஒதுங்கித் தப்பும் வழியை அறிவதற்குள் லொறியின் முன்பக்கம் என் ஸ்கூட்டரை மூர்க்கமாக முத்தமிடுகிறது. அந்த நெருக்கலில் பிதுங்கப்பட்டவன்போல் நான் வீசி எறியப்படுகிறேன். சாலையோரமாகக் காய்ந்துபோய்க் கிடந்த மண் தன் அகோர விடாயைத் தீர்க்க என் உதிரத்தை உறுஞ்சுகிறது. யாரோவெல்லாம் ஓடிவருகிறார்கள். எல்லார் முகங்களும் என்னைப் பரிதாபத்துடன் நோக்குகின்றன. சிலரின் கண்களில் நீரே துளிர்த்துவிடுகிறது. சிலர் என் நிலைகண்டு சகிக்க மாட்டாமல் தலையைத் திருப்பிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் நான் இறந்துவிட்டதாகவே எண்ணி இனி எனக்கு என்ன செய்தும் பிரயோசனமில்லையென்ற விரக்தியில் ஆழ்ந்துவிடுகிறார்கள். விபத்தின் சாதக பாதகங்களை வைத்துச் சட்டப் பிரச்சனைகளில் இறங்குகிறார்கள் சிலர். அதனால் அவர்களுக்குள் மனஸ்தாபமும் ஏற்பட்டுவிடுகிறது. அகன்ற கழுத்துள்ள ரவிக்கை அணிந்த பெண் தன் நெஞ்சில் சிலுவை அடையாளம் செய்து எனக்காகப் பிரார்த்திக்கிறாள். இந்த அவசங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளாத இருவர் எப்படியோ என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.

சம்பவங்களின் சரங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அலைவரிசைகளாய்த் தோன்றித் திடீரென ‘நறுக்கெனக்’ கத்தரித்துவிட்டனபோன்று நின்றுவிடுகின்றன.

அப்புறம் நான் என்னவானேன்?

பாரிய விபத்தில் சிக்கியவனுக்குரிய விசேட வரவேற்புகள் கிடைத்திருக்கும். எனது அனுமதியின்றியே என்னை எங்கெல்லாம் அறுத்து ஒட்டவைத்திருப்பார்கள். இந்த உடலின் வேதனைகள் அதனைத்தான் சொல்லி அழுகின்றன.

‘இதோ நான் இருக்கிறேன்’ என்ற உண்மையின் சொரூபத்தில் எதையும் நான் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்றாலும் இந்த ‘உண்மையை’ நிலை நிறுத்திய செயல்களை நான் அறிந்தாக வேண்டும்.

அவற்றை யாரிடம் கேட்டறிவேன்?
அவளிடம் கேட்கலாமா?
அவளைத்தான் கேட்கவேண்டும்.
அவளுக்குத் தெரியும். நிச்சயமாகத் தெரியும்.
இனி அவள் வருவாள்தானே!
வருவாள், வராமலும் விடுவாள்.
ஏன் அவளைத்தான் கேட்கவேண்டும், இன்னொருத்தி இல்லையா?
டாக்டர் இருப்பாரே, அவருக்குத் தெரியாததுதான் என்ன?
யார் இல்லையென்றார்கள்!
அவளைப்போல் எத்தனையோபேர் இருக்கக்கூடும்.
எல்லாரும் அவளாக முடியுமா?
நான் அவளைத்தான் கேட்பேன். அவளையே நினைப்பேன்.
அவளே வேண்டும்.
அவள், அவள், அவளேதான்!

அந்த முகம், அதன் ஒளியில் அறையில் கவியும் நிழல்களின் சாயல்கள்கூட அமிழ்ந்து விடுகின்றன. ஜ்வலிக்கும் விழிகளின் வீச்சில் என் உடல் வேதனைகள் பொசுங்கிவிட்டாற் போன்று நான் மென்மையடைகிறேன். மெத்தென்ற விரல்களின் ஸ்பரிசத்தில் கொதிக்கும் குருதிக் கலன்கள் தண்மையடைகின்றன. ஏகாந்தத்தில் அனுபவிக்கும் பால் நிலவாய் அவள் குளிர்கிறாள்.

என்னைப் பொறுத்தவரை அவள் பெயர் பானுமதி!

நானே அவளுக்குப் பெயர் சூட்டுவேன். எனக்குள் அவளை அடிக்கடி அழைப்பேன். வெளியிலும் அழைப்பேன்.

“பானூ....!
அவளுக்குக் கேட்குமோ கேட்காதோ?
நான் வாய்திறந்து அழைக்கவில்லையே!
அப்படியிருந்தும் அவளுக்குக் கேட்கும், நிச்சயம் இதுவரை கேட்டிருக்கும்!
அதோ வருகிறாளே, என்னை நோக்கி, உணராமலா வருகிறாள்?
கிட்டே வருகிறாள்!

அது அவளல்ல. இன்னொரு பணிப்பெண். பானுமதியிலும் பார்க்க இருமருங்கு தடித்த உடல். முன்பு இடை இருந்த இட்த்தில் தசைக்கோளங்களின் அக்கிரமிப்பு அவளின் சீருடையை விம்ம வைக்கின்றது. தூக்கணாம் குருவிக்கூடுபோன்று தொங்கிவிழும் மார்பகத்தை உப்பிய வயிறு தாங்கிக்கொண்டிருக்கிறது. கன்னங்களும் உப்பிப்போய்விட்டதனால் கண்கள் இன்னும் சிறியவைபோல் தோன்றுகின்றன. இவ்வளவுக்கும் அவளிடத்தில் ஒரு கவர்ச்சி இருந்தது. அவளின் ஒழுங்காஅன் அசைவுகள் அவளின் தொழில் திறமையை நிரூபிக்கின்றன. இதனால் அக்கவர்ச்சி பன்மடங்கு பெருகிவிட்டதுபோல் தோன்றுகின்றன.

அவள் சில்லுகள் பூட்டிய சிறிய துரளியை என்பக்கமாகத் தள்ளிவந்தாள். அதன் மேல்தட்டில் சின்னதொரு டிஸ்பென்சரியே இருந்தது. நான் தன்னைக் கண்களால் அளவெடுக்கிறேனென்று தெரிந்தும் தன் தொழிலுக்கேயுரிய கடமையுணர்வோடு என்னை நோக்குகினாள். தொடர்ந்து தேர்மோ மீட்டரில் என் உடல் உஷ்ண நிலையைக் கணித்து என் காலடியில் பதிந்தாள். என் தொண்டையில் ஏதோ இராசனக் கலவையை வார்த்தாள். கையோடு என்னைக் குழந்தையாய்க் கருதி வாயைத் துடைத்துவிட்டுத் திருப்தியோடு தன் கடமையை முடித்துக்கொண்டு நகர்ந்தாள்.

தொண்டையில் ஈரம் ஊறிய அந்தக் கணத்தில் அதுவரை மரத்துப்போயிருந்த என் நாக்கு விழித்திருக்கவேண்டும். அது வயிற்றின் செயற்பாடுகளை மேல்வாங்கிப் பிரகடனப் படுத்திகொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்னும் எத்தனையோ புதிய பொறிகளை இயக்கிவிட்டதுபோன்று, பிரதான மண்டபத்தின் விளக்குகள் அனைத்தையும் ஒன்றுசேர ஏற்றிவிட்டதுபோன்று உடம்பின் நரம்புக் கால்வாய்கள் உணர்வால் நிரம்பித் துடித்தன.

முதலில் பானுமதியைக் கண்டபோது எனது உள்மனம் விழித்துக்கொண்டது. இப்போது இந்திரியங்களின் விழிப்பினை உணர்ந்தேன். உணர்ந்தென்ன, எல்லாம் ஒருசில நேர ஆர்ப்பாட்டங்கள். மறுபடியும் தம்முள் ஒடுங்கிப்போவதன் அறிகுறியாய் புதிய அக்கினி நிலை தணிந்து, குளிர்ந்து படிப்படியாய் அடங்கும் இதம்.

நான் சுற்றுப்புறம் பார்வையைச் செலுத்த முயன்றேன். எனினும் விழிகள் அசைய மறுத்தன. தூக்கமே சொர்க்கம் போலவும் அதில் அமிழ்ந்துவிடுவதில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சங்கடமே வேண்டியதில்லைப் போலவும் தோன்றியது.

இமைகள் பாரத்தால் அழுந்தின. விழிமேடுகள் விழிக்கூரையில் சொருவிக்கொள்ளக் கண்மணிகளை இருள் சூழ்கின்றது. அரைமயக்கத்தில் நரம்புகளே கண்களாய்ச் சோர்கின்றன. உடலை அழுத்தும் சுமை தளர்ந்துகொண்டுபோக நான் பஞ்சாய் மிதப்பது மயக்கத்திலோ ஆகாயத்திலோவென்ரு தெரியவில்லை. இந்த நிலையில்தான் என்னுள் அந்த ‘விழிப்பு’ ஏற்பட்டது. எனினும் எதன்மூலம் அந்த விழிப்புச் செயல்படுகிறதெனத் தெரியவில்லை.

ஆத்மாவின் விழிப்பு!

அந்தரங்கமாய் என்னுள் ஜீவிக்கும் உட்பிரக்ஞைதான் இந்த ஆத்மாவோ? நான் என்ற அகங்காரத்துக்குத் துணை நிற்கும் இந்த உடலின் உணர்ச்சிகள் உள்நுழையமுடியாத கர்ப்பக்கிரகத்தில் கரந்துறையும் நித்தியமான சக்தியாய் இது இருக்கவேண்டும். இல்லையேல் மயங்கவும் முயங்கவும் மட்டுமே ஆசைகொள்ளும் இந்திரியங்களின் செயற்பாடுகளையும் மீறி இவற்றால் நுகரமுடியாத உணர்வுகளுக்கு எப்படித்தான் என்னை அழைத்துச்செல்ல முடிகின்றது? நான் பானுமதியிடம் கேட்டு அறிந்துகொள்ள ஆவல்கொண்டவை இதோ ஆத்மாவின் விழிப்பில் இரைமீட்கப்படுகின்றன. அவை நிகழும் காலத்திலேயே அவற்றைப் பார்ப்பதுபோல் பிரமையை உணர்த்துகின்றன.

வெயிலின் வெப்பத்தில் காலம் கரைந்துகொண்டிருக்கின்றது. பொழுதுகள் பலப்பலவாய் மாறி நாட்களாய் முழுமைபெறுகின்றன. மூன்று முழு நாட்களாக என் உடல் துவண்டு அசைவற்றுக் கிடக்கிறது. மெல்லியதாய் இழையும் மூச்சு எனது வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைக் கோடிட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதன் கால எல்லைகளை வரையறை செய்வதில் தமக்குள்ள அதிகாரத்தைப் பிரயோகிக்கும் டாக்டர்கள். தமது திறமையை மீறிய எந்தச் சக்தியும் எனது மூச்சின் நூலிழையை அறுத்துவிடாதபடி அவர்களின் தீவிர கண்காணிப்பு. இறுமாந்த நிலை. கரைந்துசெல்லும் ஒவ்வொரு விநாடியும் டாக்டர்களின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்துகின்றன. நான் புனர்ஜென்மம் எடுக்கிறேன்.

உடற்கூறுகள் சாத்திரம் லேசுப்பட்டதல்ல. அதனுடைய தத்துவங்கள் இயற்கையின் நியதிகளோடு பொருதி வெல்வதெல்லாம் டாக்டர்களின் நாவிலும் விரல் நுனிகளின் அசைவுகளிலும் தங்கியிருக்கின்றது என்பதை நம்பவேண்டியிருக்கிறது.

நம்புகிறேன்!
அவற்றுக்கு நான் மனமார நன்றி செலுத்துகிறேன்!      

என்னைப் பார்ப்பதற்கு முதன்முதலாக ஆட்களை அனுமதிக்கிறார்கள். எனது கட்டிலோடு ஒட்டியபடி அம்மா, அப்பா, உறவினர் ஓரிருவர், ஆசிரிய நண்பர்கள்.

உயிர்க்குருத்துகள் முழுமையாகக் கருகிவிடாத நிலையில் என்னைக் காண்பதில் அம்மாவுக்கு அழுகையினூடே மிக்க ஆனந்தம். நீர்த்தேக்கத்தில் அமிழும் விழிகளில் அந்த ஆனந்தமும் ஆழமான பாசமும் தொற்றி நிற்கின்றன. அப்பா துயரம் தாளாது மௌனமாகவே கரைகிறார். இடையிடையே வந்தவர்களின் கேள்விகளுக்குப் பதிலிறுக்கிறார். ஓரிருவர் அப்பாவிடம் ஏதாவது கேட்கவேண்டுமேயென்ற சம்பிரதாயத்துக்காகப் பொருத்தமில்லாத கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு அவர் பதில் சொல்லத்தெரியாமல் மௌனமாகும்போது அவற்றுக்கான பதில்கள் தமக்கு ஏற்கனவே தெரியும் என்ற பாவனையில் அவர்கள் அவருடைய மௌனத்தை அங்கீகரிக்க, அப்படியானால் சரிதான் என்றளவில் அவர் மீண்டும் கரைகிறார். நான் அகப்பட்டு மீண்ட விபத்தின் கொடூரத்தை அவரவர் தங்கள் கண்ணோட்டத்தில் எடுத்து அலசுகிறார்கள்.

வந்தவர்கள் போகிறார்கள்; புதியவர்கள் வருகிறார்கள். பொழுதுகள் மாறுகின்றன. புதிது புதிதாய் மருந்துகளைச் சுவைக்கிறேன்.

நிகழ்ச்சிகள் தொடர்ந்து உட்பிரக்ஞையின் பார்வைக்கு எட்டாது மங்கிக்கொண்டு போகத் திரும்பவும் கட்புலனின் விழிப்புக்குக் கூடுபாய முனைகிறேன்.

தூக்கமா விழிப்பா என்று கூறமுடியாத மருண்ட நிலை. உட்பிரக்ஞையின் பார்வையிலிருந்து வழிந்திறங்கி நனவுலகில் அடிவைப்பதில் தெரியும் புதிய சூழல்.

எங்கும் அமைதி!
வெண்சிட்டுகளாய் நடந்து திரியும் பணிப்பெண்களின் பாதக்குறடுகள் மாத்திரம் சப்திக்கின்றன. மற்றும்படி ஆழ்ந்த அமைதி. இடையே,
மாடியில் ஸ்ட்ரெச்சர்  வழுக்கிச் செல்லும் லாவகம்.
அடிக்கிளாஸில் கரண்டியை விட்டு ஹார்லிக்ஸ் கரைக்கும் களகளப்பு.

நனவுலக நிகழ்ச்சிகளை முன்னைப்போல் கிரகிக்கும் திறன் எப்படியோ கூடிவிடுகின்றது. மனம் குதியனடித்துக்கொண்டு ஓட விழையும் குழந்தையாய்த் திமிறும் புளகாங்கித நிலை. அதன் கடிவாளம் என்னிடம் எப்போதுமே இருந்ததில்லை. இப்போதும் இல்லை.

மனதிற்குக் கடிவாளம்தான் ஏது?

ஒரே முனைப்பு. அதன் மையத்தில் ஒடுங்கும் சிந்தனை. ஒடுங்க ஒடுங்க மோனப் பெருவெளியில் மிதக்கும் பரவசம் சூழு. ‘நான்’ என்னும் அகங்கரத் தன்மை அகன்று எல்லாமே சூனியமாக, என்னிலும் கோடிப்பங்கு சக்திமிக்க ஒளியின் துணுக்கை அணுகிப் பொலிவடைவேன். அந்தத் துணுக்கே பிறகு பல்கிப் பெருகி உலகையளந்து மேவி நிற்கும். அதில் சங்கமிக்க விழையும் ஆவேசத் தூண்டுதல்கள்...

அதையடைந்து, அதற்கப்பாலும் போய்..
போகமுடிகிறதா? போகத்தான் விடுகிறதா?
இந்த உலகின் மீதான பிணைப்பு,
பொருட்களின்மீதுள்ள பேராசை,
மாந்தர்களின் பாசம்,
பெண்களின் போதை.....

மனிதர்கள் அனைவரும் துறவிகளாகிவிடாதபடி எத்தனை கண்காணிப்புகள்!

எல்லோருமே துறவிகளாகிவிட்டால் இந்த உலகில் என்னதான் நடந்துவிடும்? படைப்பவன் ஏன் ஒழிந்து நிற்கிறான்? பெண் மட்டும் ஏன் படைப்பின் கருவி ஆகிறாள்? பிரசவ வேதனையில் ஏன் ஆண்களுக்குப் பங்கு இல்லை? இலக்கியப் படைப்பாளிகள் ஏன் தங்களைப் பற்றிப் பெருமையடித்துக்கொள்கிறார்கள்? டாக்டர்கள் ஏன் ‘ஸ்டெத்தை’ வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள்? சாராயக் கடைகள் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன? உத்தியோகத்தர்கள் ஏன் வீட்டுக்குப்போக அவதிப்படுகிறார்கள்? பஸ் கண்டக்டர்களுக்கு ஏன் மிகுதிக் காசைக் கொடுப்பதில் இவ்வளவு ஞாபக மறதி? யாழ் தேவிகள் ஏன் இன்னும் மோதிக்கொள்ளவில்லை? கனவுகள் ஏன் நிறங்களில் தோன்றுவதில்லை? நான் ஏன் பானுமதியை நினைத்துக் கொண்டிருக்கிறேன்?

என்ன இது! இக்கேள்விகளுக்கெல்லாம் எங்கே பதில் இருக்கிறது?

நினைப்பதெல்லாம் முடிவில் வந்து பானுமதியிடம் சரணடைவதன் அர்த்தம் என்ன?

நான் அவளை விரும்புகிறேனா? விரும்புகிறேனென்றால் ஏன் விரும்பவேண்டும்?

பெண்களின்மேல் கொள்ளும் விருப்பங்களுக்கு முடிவு ஏது? பெண்ணால் புறக்கணிக்கப்படும்வரையா? அல்லது பெண்களை வெறுக்கின்றவரையா?

அப்படியானால் பானுமதியை எப்போது விரும்ப ஆரம்பித்தேன்? எப்போது வெறுப்பேன்?

நினைக்க ஆரம்பித்தால் எல்லாவற்றையும்தான் நினைக்கவேண்டியிருக்கிறது.

ஆனால் அவை திரும்பவும் பானுமதியில் வந்து முடியும் மர்மம் என்ன?

அவளிடமிருந்து அப்படி என்ன புது அனுபவம் எனக்குக் கிடைக்கப்போகிறது?

இதுவரை நான் பழகிய பெண்களிடமிருந்து கிடைக்காத அனுபவமா?

வெறும் பேச்சுக்கள், அர்த்தமற்ற சிணுங்கல்கள், தேவையற்ற சிரிப்புகள், இரட்டை அர்த்த வார்த்தைகள்....

இவைகளை எதிர்பார்த்து நான் அவர்களுடன் பழகவில்லையே! அவர்கள் ஏனோ விடாப்பிடியாக அப்படி நடந்துகொண்டார்கள். அவர்களைப் புரிந்துகொள்வதற்கு அவை வழிகாட்டலாம் என்று நினைத்துக்கோண்டார்களோ!

இந்தப் பெண்களே இப்படித்தானா?

இவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? பெண்களைப் பொறுத்தவரை என் முனைப்புகளே பவித்திரமானவை.

அழகில் மயங்குவதில் நான் என்னை மறப்பேன். அதன் உபாசகனாக இருப்பதில் அசாத்திய பெருமிதம் அடைவேன். கடலலைகளின் ஒழுங்கான அசைவிலும், விண்ணில் வெண்மையாய்க் கருமையாய்த் திரளும் மேகங்கள் விநாடிக்கொரு உருவம் எடுத்து அந்த உருவத்துடனேயே தம்முள் கூடிக் கலந்து புதிய மேகச் சிதறல்களைச் சிருஷ்டிப்பதிலும், கண்ணுக்குப் புலப்படாத காற்றின் மென்மையில்கூட அஞ்சத் தகுந்த அழகு தெய்வீகமாய்ச் சுடர்விடுவதை உணர்வேன். செவ்விளநீரின் நிறத்தில், அதன் மேற்பரப்பின் வழுவழுப்பில் ஓர் அற்புத அழகு என்னைக் கவர்ந்திழுக்க அதை முழுமையாகவே விழுங்கிவிட்டால்தான் உண்டு என்ற உந்தல், அழகு என்னுள்ளெ ஏற்படுதிய சாதனையேயன்றி வேறென்ன? இயற்கையின் இந்த அழகுகளையெல்லாம் பெண் என்ற படைப்பில் ஒருங்கே காணுகின்றபோது பிரமிப்பிலிருந்து விடுபடமுடியாமல் மனமே அழகால் நிறைந்து நெகிழ அதற்குரிய பிம்பத்தைக் கையெடுத்து வணங்கவேண்டுமென்ற தூண்டுதலுக்கு ஆளாகிறேன். அழகின் முன்னால் அடிமைப்பட்டு என்னை இழக்கும்போது நான் மனிதத் தன்மையிலிருந்து எவ்வளவோ உயர்ந்து நிற்பதுபோல் உணர்கிறேன்.

ஒரு பெண்ணில் அந்த அழகின் பிறப்பிடந்தான் எது என்று நிரணயிக்க முடியாதபடி அது அவள்மீது எங்கும் நிறைந்திருக்கவேண்டும். முகத்தின் முன்னால் விழும் மயிர்க்கற்றைகளில், அதைக் காதோரம் ஒதுக்கும் விரல்களின் பசுமையில், குறுகி வளைந்த நெற்றியில், புருவங்களின் இசைவில், விழிகளின் வீச்சில், நாசியின் நிமிர்வில், கன்னங்களின் மழமழப்பில், இதழ்களின் துடிப்பில் கழுத்தின் கடைசலில், மார்பின் கூர்மையில், இடையின் ஒடுங்கலில், நடையின் நேர்த்தியில், குரலின் இசையில்... எங்குமே ஒரு தேஜஸ் நின்று அமைதியாய்ப் பிரசங்கிப்பதுபோல் இருக்கவேண்டும்.

மழை பெய்ததும் மண்ணிலிருந்து எழும் மணம்போல அவளுக்கென்றொரு மணமுண்டு. அந்த மணத்தில் அவளின் அழகும் இயல்புகளும் இழைந்து மகரந்தமாக என் சுவாசத்துடன் சங்கமிக்கவேண்டும். இதற்கு அவளை நான் முதலில் அணுகவேண்டும். அணுகியதும் மெள்ள நிதானித்து நான் தேடும் மணத்தை அடையாளம் கண்டு, மாறா வேகத்தில் பக்குவமாய் அவளின் மணத்தை என் மூச்சோடு பிணைத்து இழுத்து அதனையே முற்றுமாய் என் சுவாசப்பைகளில் நிறைத்து, என் உடல் இழையங்கள் எங்குமே அம்மணம் வியாபித்துவிட்டாற் போன்றும் அவளின் மணத்தினூடான அணுகல் மூலம் அவளது பெண்மையின் மெல்லியல்புகளைத் தன்வயமாக்கிக்கொண்டது போன்றும் அனுமானம் ஏற்பட்டு அதன் நிறைவில் என் முனைப்புகள் முழுமைபெறும். அந்தச் சுகானுபவத்தில் ஏற்படும் பெருமிதம்; அந்த விநாடிகளே அற்புதமானவை!

அவை என்றைக்கும் போலியாதல் கூடாது.

அவற்றின் சிரஞ்சீவித் தன்மையை நிறுவவேண்டும். அவற்றுக்குக் கருவியாகித் தன்னை முழுமையாய் அர்ப்பணிக்க ஒருத்தி எனக்கு வேண்டும். அவளின் இசைவுடன் அவளின் மணத்தில், பரிசவுணர்வில், விழிக்கதிர் மோதல்களில் அவளை ஆட்கொண்டு அதன்மூலம் என் முனைப்புகள் சிரஞ்சீவித்தன்மை பெறவேண்டும்.

அந்த ஒருத்தியை நெஞ்சில் இருத்தி எத்தனை காலம் என் தேடல் நடந்துகொண்டிருக்கிறது!

இப்போதுகூட...

பானுமதி ஏன் அந்த ஒருத்தியாக இருக்கக்கூடாது?

இதுதான் என் நினைவுகள் கடைசியில் என்னையறியாது பானுமதியிடம் வந்து சரணடைவதன் விந்தையின் காரணமோ?

பானுமதி!

அந்த ஒரு சொல் என்னுள் எத்தனை ஜாலங்களை ஏற்படுத்துகின்றது!

என் நோவுகளுக்கெல்லாம் மருத்துவம் அந்த ஒரு சொல்தானோ?

பானூ...

என் உதடுகள் ஒருமுறை சந்தித்து ஒலியெழுப்பி மறுபடியும் முன்னே குவிந்து மனத்தின் ஓங்காரமாய் ஊ...ழையிடுகின்றது!

இம்முறை சப்தமே வந்துவிடுகிறது. சில நாட்களாக என்னுள் திரண்ட சக்திகள் அந்த ஒரு அழைப்பில் தம்து முழுப்பலத்தையும் பிரயோகிக்கின்றன. தொடர்ந்து யாரோ விரைந்து வரும் அரவம்.

புறா!

அவள் பானுமதியேதான்!

எனது பானுமதி!

பானூ...

இப்போது சப்தம் வெளிவரவில்லை. சக்திகள் என் முதல் அழைப்பின்போது விரயமாக்கப்பட்டிருக்கவேண்டும்.

இனி அழைக்கவேண்டியதில்லை. அவள்தான் அருகில் வந்துவிட்டாளே!

எனக்கு முதல் விழிப்பை ஏற்படுத்தியவள், பிறகு என் ஆன்ம விழிப்புக்குத் துணை நின்றவள், என் முனைப்பின் காரணி!

“பானு விரைவில் வந்துவிடு!”

“இதோ வந்துகொண்டிருக்கிறேன்!”

“உன்னை அடையாளம் கண்டுகொள்ள எவ்வளவு தாமதித்தேன்!”

“அதில்தான் எவ்வளவோ இனிமை இருக்கிறது.”

“அப்போ என்னை முன்னமே தெரிந்துகொண்டாயா?”

“தெரிந்துதான் உங்களைச் சுற்றிக்கொண்டிருந்தேன்.”

“என்னைத் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறாய்!”

“இல்லை! அது பெண்களின் இயல்பு.”

“பொறுமையைச் சோதிப்பதா?”

“இல்லை, பொறுமையைப் போதிப்பது!”

“அது மாத்திரம்தானா போதிப்பாய்?”

“வேண்டியதெல்லாம் போதிப்பேன்!”

“உன்னைக் கண்டுகொண்டேனே, அதுவே போதும் இப்போது!”

“என்னைக் காணவைத்தேனே அதுவே போதும் இப்போது!”

ஒன்றன்பின் ஒன்றாய்!
நானே பானுமதி!
பானுமதியே நான்!
நான் – அவள்!
அவள்-நான்!
நானே அவளாகி நிற்கிறேன். அவளே நானாகி நிற்கிறாள்!
இது என்ன விந்தை!
அவள்,
என்னருகே நிற்கிறாள்-
மணம்!
என் கையைப் பற்றுகிறாள்-
ஸ்பரிசம்!
என் விழிகளைச் சந்திக்கிறாள்-
கதிர்களின் மோதல்!
மணம்! ஸ்பரிசம்! விழிக்கதிர்கள்!

என் முனைப்புகள் இதோ நிதர்சனமாகவே முழுமையடைகின்றன. முனைப்பின் பரிபூரணத்துவம்!

அவள் என்னுள் நிறைகிறாள், முதலில் அவளின் மணமாக, பிறகு படிப்படியாகய் அவளின் மெல்லியல்புகளாக, ஸ்தூலசரீரமாக என்னுள் ஐக்கியமாகிறாள்.

என் இதயத் துடிப்புகள் ஏன் இவ்வளவு வேகத்தில் விரைகின்றன? என்ன பிசாசு வேகம்! உத்வேகம்! பரிபூரணத்துவ எல்லையை அணுகிவிடுவதிலுள்ள ஆவேசம்!

இதோ எல்லை!

இது, இது, இதுவேதான்!

இதன் அற்புத தரிசனத்தில் மயங்குகிறேன். உணர்விழக்கிறேன்.

புலன்கள் ஒடுங்குகின்றன.

நனவு நிலை கழன்றுவிழக் கனவின் பிராந்தியத்தில் பிரவேசிக்கிறேன்.

இதோ சந்தியில் திரும்புகிறேன். இப்போது நான் தனியே வரவில்லை. கூடவே பானுமதியும் வருகிறாள். எனக்குப் பக்கத்தில், முன்னால், பின்னால், எனக்குள்ளே... எங்குமே அவளாகி வருகிறாள். முன்னால் Blind Corner என்ற அறிவிப்புப் பலகை துலாம்பரமாகத் தெரிகிறது. சந்தியில் திரும்பியதும் மெல்லிய பூங்காற்று எம்மை வரவேற்கிறது. சாலையின் ஓரமாக அந்தப் புளியமரம். மேகத்தை மறைத்தபடி அதன் கிளைகள். பூத்துச் சொரியும் அதன் யௌவன கோலம். மெய்சிலிர்க்கிறது!

அதைக் கடந்து மேலே செல்கிறேன். கனவு நிலை கழன்று பஸ்பமாகிறது. அதிலிருந்து விலகி மேலே செல்கிறேன்.

துயில், துரியம், துரியாதீதம்.... இதோ யோகம், ஞானம்!

என் உடலில் ஆன்மா தன் விடுதலைப் பயணத்தை நோக்கி விரையும் நிலைகொள்ளாத சஞ்சரிப்பை இதோ உணர்கிறேன். அது தன் சிறகுகளை விரித்து என் உடற் கூட்டிலிருந்து செல்வதிலுள்ள குதூகலம்!

அது கடந்து செல்லும் நிலையங்கள் நினைவிலிருந்து மங்குகின்றன.

அவளின் முறுவல் மாத்திரம் என்னுள் ஆழ்ந்து நிற்கிறது; ஆன்ம விடுதலையில் அதன் பங்கு எவ்வளவு மகத்தானது!
--------

அலை - 1978 வைகாசி