Tuesday, January 29, 2013

யுத்த காண்டம்



அவன் எப்போதுமே

நெருப்பாய் இருப்பான்
நான் நீராய் இருப்பதால்
அவனை அணைக்க முடிகிறது.

என்னிடம் நீரின் இருப்பு
ஆவியாகும்போது மட்டும்
அவனுடன் சேர்ந்து
எரிந்துபோகிறேன்.

எரிந்து போவதற்கு
எவ்வளவு
அழகான வழி!

இளமை
இளமையிடம் தோற்றுப்போவதிலும் ஒரு
இனிமை இருக்கிறது!

பெண்
தான் விரும்பியவினிடம்
தோற்றுப்போவதில் திருப்தியடைகிறாள்;
துயிலுரியப்படுவதில்
தென்றலை அனுபவிக்கிறாள்!

அதனாலே இது
முடிவடையாத யுத்தம்.
தோற்றவர்களிடம்தான்
வெற்றிக்கொடி தரப்படும்
விநோதமான யுத்தம்!

அவன் அரசனாகத்தான்
ஆட்சி செய்கிறான்
ஆனால்
அதிகாரம் என்னவோ
இவளிடம்தான் இருக்கிறது.

மன்னவனே!
உன்னிடம் மண்டியிடுபவர்களை
மறந்துவிடு
மண்டியிடு என் முன்னே!

இதோ
செங்களுநீர்ப் பூக்கள் மிதக்கும் வாவி
கரை புரண்டு வழிகிறது.
மூழ்கு
மூழ்கி எழுந்தபின்
என் மார்பில்
முகம் துடை
சோர்ந்த உன் கைகளால்
என் உடல் தழுவு
உன் மூச்சுக் காற்றால்
என் மேனியை உலர்த்து.

உறங்கு
என் பிள்ளைபோல்
மடியில் உறங்கு
விடியும்வரை உறங்கு!

நாளை மறுபடியும்
போருக்குத் தயாராவாய்.
எனினும்
இவளைப் புரிந்துகொண்டால் மட்டும்
இந்தப் போர்க்களத்தில்
உனக்கு இடமுண்டு.

இவள் நெஞ்சு
அடைக்கலம் கேட்டவனுக்கு
அரண்மனை!
அனுபவிக்க வந்தவனுக்கு
ஆயுள் தண்டனை!

சட்டங்களையும் சம்பிரதாயங்களையும்
சாட்சிக்கழைக்காதே
பெண்ணைப்
போதைப் பொட்டலாமாய்ப் பார்க்காதே
இவள் புணர்ச்சி யந்திரமல்ல,
பாரிஜாத மலர்!

தெரிந்துகொள்!
மாசற்றவள்
மனதாலும் பொசுக்குவாள்!

Wednesday, January 16, 2013

இறைவனைக் கண்டால்...


இனியொரு புதிய  உலகினைக்  கேட்பேன்
உலகம் முழுவதும் ஒரே மொழி கேட்பேன்
எல்லைகள் அற்ற நாடுகள் கேட்பேன்
எதிரிகள் இல்லா இனங்களைக் கேட்பேன்.

சமத்துவ நெறியில் அரசொன்று கேட்பேன்
சட்டங்களில்லா நீதியைக் கேட்பேன்
போர்க்குணமற்ற தலைவர்கள் கேட்பேன்
பாராளுவதிலும் பெருந்தன்மை கேட்பேன்.

சாதிகள் ஒழிந்த சமுதாயம் கேட்பேன்
சேரிகளில்லா ஊர்களைக் கேட்பேன்
சேர்ந்தே வாழும் சனங்களைக் கேட்பேன்
சோர்ந்த மனத்தினர் அருகிடக் கேட்பேன்.

ஊரோடு உண்ணும் உறவினர் கேட்பேன்
உறவினரிடையே இணக்கத்தைக் கேட்பேன்
சுயநலம் கருதா நண்பர்கள் கேட்பேன்
செய்நன்றி மறவா அயலவர் கேட்பேன்.

வேலிகளில்லா வீடுகள் கேட்பேன்
போலிகளற்ற இதயங்கள் கேட்பேன்
பரிந்தே உதவும் தொண்டர்கள் கேட்பேன்
வாரிக் கொடுக்கும் வள்ளல்கள் கேட்பேன்.

திறமையை மதிக்கத் தெரிந்திடக் கேட்பேன்
திருடர்கள் தாமாய்த் திருந்திடக் கேட்பேன்
தன்திறன் அறியும் திறமையைக் கேட்பேன்
திறமையின் வழியில் சிறந்திடக் கேட்பேன்.

வேலைகள் எங்கும் மலிந்திடக் கேட்பேன்
கிராமங்கள் தோறும் கைத்தொழில் கேட்பென்
பொருளுடையோர்கள் பகிர்ந்திடக் கேட்பேன்
பொருளில்லாதோர் முயன்றிடக் கேட்பேன்.

ஆற்றினில் வெள்ளம் அடங்கிடக் கேட்பேன்.
எரிமலை தன்னுள் ஒடுங்கிடக் கேட்பேன்
காற்றிலும் மழையிலும் கருணையைக் கேட்பேன்
சமுத்திரம் அனைத்திலும் சாந்தியைக் கேட்பேன்

கடலினில் முத்துகள் மலிந்திடக் கேட்பேன்
காடுகள் கற்பைக் காத்திடக் கேட்பேன்
கழனியில் தானியம் நிறைந்திடக் கேட்பேன்
காலங்கள் தோறும் மாரியைக் கேட்பேன்.

அருவிகள் யாவும் இணைந்திடக் கேட்பேன்
ஆறுகள் அனைத்தும் ‘அணை’ந்திடக் கேட்பேன்
எண்ணெய் வளங்கள் எங்கிலும் கேட்பேன்
தாதுக்கள் திரவியம் தோண்டிடக் கேட்பேன்.

ஆழியின் அகந்தை அழிந்திடக் கேட்பேன்                                                        
மாரியின் சீற்றம் முடங்கிடக் கேட்பேன்
இடிகளின் அக்கினி அணைந்திடக் கேட்பேன்
ஊழியின் உக்கிரம் ஆறிடக் கேட்பேன்.

ஓசோன் உலகைக் காத்திடக் கேட்பேன்
அழுக்கு வாய்வுகள் அழிந்திடக் கேட்பேன்
சூழலின் தூய்மை போற்றிடக் கேட்பேன்
சேற்றினைக் கழிப்போர் கற்றிடக் கேட்பேன்.

மாரிக் காடுகள் செழித்திடக் கேட்பேன்.
தார்மண் மடிகளின் தயவினைக் கேட்பேன்
எண்ணேய் வளங்கள் ஊறிடக் கேட்பேன்
இயற்கையின் செல்வம் பகிர்ந்திடக் கேட்பேன்.

வாவிகள் யாவும் நன்நீர் கேட்பேன்
சேல் விளையாடும் வயல்களைக் கேட்பேன்
நீர்நிலை யாவும் நிறைந்திடக் கேட்பேன்
நெற் கமக்காரர் மகிழ்ந்திடக் கேட்பேன்.

தூந்தர பூமி உறைந்திடக் கேட்பேன்
துருவக் கரடிகள் தளைத்திடக் கேட்பேன்
உறைபனி விலங்குகள் வாழ்ந்திடக் கேட்பேன்
குளிர்நிலக் காடுகள் காத்திடக் கேட்பேன்.

உயிர்க்கொலிக் கிருமிகள் அழிந்திடக் கேட்பேன்
அண்டத்துக் கோளங்கள் ஒழுங்கினைக் கேட்பேன்
அகிலத்து வெம்மை தணிந்திடக் கேட்பேன்
ஆழியின் மட்டம் அடங்கிடக் கேட்பேன்.

உழைக்கும் மக்கள் உரிமைகள் கேட்பேன்
உண்டு களிப்போர் உணர்ந்திடக் கேட்பேன்
பாட்டாளி வர்க்கம் இணைந்திடக் கேட்பேன்
பாரினில் செல்வம் பகிர்ந்திடக் கேட்பேன்.

தமிழருக் கென்று நிலமொன்று கேட்பேன்
நிலத்தினில் ஒற்றுமை நிலவிடக் கேட்பேன்
போரினில் நாட்டம் போய்விடக் கேட்பேன்
புரிந்துணர் நெஞ்சுடன் பேசிடக் கேட்பேன்.

கதவுகள் இல்லா கோயில்கள் கேட்பேன்
கோயிலில் கலைகள் வளர்ந்திடக் கேட்பேன்
சாமிமார் இல்லா சமயங்கள் கேட்பேன்
சமயங்கள் சாயங்கள் கலைந்திடக் கேட்பென்.

இல்லங்கள் அனைத்திலும் திருக்குறள் கேட்பேன்
இலக்கணமற்ற கவிதைகள் கேட்பேன்
இசையினில் வாழ்வு இயைந்திடக் கேட்பேன்.
ஊரெங்கும் நூலகம் அமைந்திடக் கேட்பேன்

பெற்றார்களிடத்தே பொறுமையைக் கேட்பேன்
பிள்ளைகளிடத்தே பணிவினைக் கேட்பேன்
பெண்களினிடத்தே எளிமையைக் கேட்பேன்
பெரியோரிடத்தே பண்பினைக் கேட்பேன்.

இளைஞர்கள் மத்தியில் எழுச்சியைக் கேட்பேன்
இல்லாதோருக்கு இரங்கிடக் கேட்பேன்
ஏழைகள் முயற்சியில் ஏற்றத்தைக் கேட்பேன்.
இரந்தே வாழ்பவர் ஒழிந்திடக் கேட்பேன்.

அகமுடையாளிடம் அடக்கத்தைக் கேட்பேன்
அணைப்பவன் மனதில் அன்பினைக் கேட்பேன்
இரவிலும் பகலிலும் ஒருமனம் கேட்பேன்
இருவரின் போக்கிலும் பொறுமையைக் கேட்பேன்.

பெண்களுக்குரிமை பிறப்பிக்கக் கேட்பேன்
ஆண்களின் கற்பு உரைத்திடக் கேட்பேன்
மனையாளின் மனதை அறிந்திடக் கேட்பேன்
மங்கையைத் தாயாய் மதித்திடக் கேட்பேன்.

காதலுக்கென்றொரு கடவுளைக் கேட்பேன்
கன்னியர் நெஞ்சினில் கருணையைக் கேட்பேன்
காளையர் பெண்களைப் புரிந்திடக் கேட்பேன்
களவியல் வாழ்விலும் கண்ணியம் கேட்பேன்.

மானுடம் மதிக்கும் மனிதர்கள் கேட்பேன்!

இறைவன் என்பவன்



எங்கிருந்தோ உன்னை நினைக்கின்றேன்
எங்கிருந்தோ உன்னை அழைக்கின்றேன்
எங்கிருந்தோ என்னை உருக்(கு)கின்றாய்!

உன்னை நினைப்பதைத் தவிர வேறொன்றையுமறியேன்
உன்னை நினைப்பதல்லால் என் வேண்டல்கள் வேறில்லை!

கந்தனாய் கண்ணனாய் கணபதியாய் கலைமகளாய்
சக்தியாய் சதாசிவனாய் புத்தனாய் யேசுவாய்
நாயகமாம் நபிகளாய் நின் நாமங்கள் எத்தனை!

தாயாய் தந்தையாய் பிள்ளையாய் உடன்பிறப்பாய்
தாரமாய் துணைவனாய் உன் அவதாரங்கள் எத்தனை!

இசையாய் ஓவியமாய் பண்ணாய் பாவமாய்
நடிப்பாய் நடனமாய் உன் நளினங்கள் எத்தனை!

கருணையாய் காதலாய் பண்பாய் பாசமாய்
நட்பாய் நேசமாய் உன் நயங்கள் எத்தனை!

இதயமாய் எண்ணமாய் உணர்வாய் கனிவாய்
பக்தியாய் பரவசமாய் உன் பண்புகள் எத்தனை!

மேகமாய் முகில்களாய் மின்னலாய் முழக்கமாய்
மாரியாய் வெள்ளமாய் உன் மகிமைகள் எத்தனை!

ஒலியாய் அமைதியாய் ஊமையாய் ஓங்காரமாய்
இருளாய் ஒளியாய் உன் ஒப்பனைகள் எத்தனை!

அன்பாய் அறிவாய் அருளாய் அருஞ்சுவையாய்
அறமாய் ஆதரவாய் உன் ஆற்றல்கள் எத்தனை!

நீராய் நெருப்பாய் பனியாய் பூம்பொழிலாய்
காற்றாய் காலங்களாய் உன் கோலங்கள் எத்தனை!

மண்ணாய் மரங்களாய் செடிகளாய் கொடிகளாய்
மலர்களாய் மணங்களாய் உன் மாண்புகள் எத்தனை!

நீதியாய் நியாயமாய் நாடாய் நன்மக்களாய்
தியாகமாய் தர்மமாய் உன் தற்பரங்கள் எத்தனை!

கனிகளாய் சுவைகளாய் கன்னியாய் கற்பாய்
அழகாய் இளைஞனாய் உன் ஆரங்கள் எத்தனை!

பெண்ணாய் புணர்ச்சியாய் போதையாய் பகுத்தறிவாய்
ஆண்மையாய் ஆற்றலாய் உன் அற்புதங்கள் எத்தனை!

தெம்மாங்காய் தாலாட்டாய் மழலையாய் கொஞ்சலாய்
கும்மியாய் குரவையாய் உன் குரல்கள் எத்தனை!

Friday, January 11, 2013

மரங்கள் என் நண்பர்கள்



செழித்த இலைகளின்
சிரிப்பினில் இணைவேன்
சாயும் கிளைகளின்
இசையினில் திளைப்பேன்

ஒழுகும் நிழலின்
அணைப்பினில் அயர்வேன்
தழுவும் இதழ்களின்
காதலில் கரைவேன்

நகரும் செடிகளின்
நடனங்கள் ரசிப்பேன்
தவழும் கொடிகளில்
குழந்தையைக் காண்பேன்

படரும் செடிகளின்
நட்பினில் நெகிழ்வேன்
பற்றும் கொடிகளின்
பாசத்தில் பதைப்பேன்

மாயம் காட்டும்
மலர்களில் மகிழ்வேன்
மேப்பிள் மடியில்
மதுரத்தை உண்பேன்

தேயும் மரங்களின்
தியாகத்தை மதிப்பேன்
தாங்கும் தண்டினில்
தந்தையைத் துதிப்பேன்

அணைக்கும் கொடிகளில்
அன்னையை நினைப்பேன்
அமைதியின் ஆட்சியில்
இறைவனைக் காண்பேன்!

மரங்களை நேசிப்போம்!



போன தடவை
மரங்களைப் பாடாமல்
மாண்டு போனதால்
தேவர்கள் என்னைத்
திருப்பி அனுப்பிவிட்டார்கள்!

000

றைவன்
தனக்காகக் கட்டிய கோயில்களே
மரங்கள்.

இயற்கை
வரைந்து பழகிய ஓவியங்களையே
இறைவன் தன்
கோயில்களாக்கிக் கொண்டான்.

000

வீதியோரத்து விளம்பரங்களில்
மரங்களே நீங்கள்தான்
மிக அழகானவை.

பழைய பொருட்களை நேசிக்கிறவர்கள்
மரங்களை மட்டும் ஏனோ
மறந்துவிடுகிறார்கள்.

000

ரங்கள் -
காற்றைப் பக்கவாத்தியமாக்கி
இசைப்பதுதான் ஒரு நாட்டின்
முதலாவது தேசிய கீதம்.

புயல் வீசும்போதெல்லாம்
பூக்களையும் இலைகளையும் உதிர்த்து
நிறுத்தென்று வேண்டி
இயற்கைக்கு அர்ச்சனை செய்யும்.

மரங்கள்தான் மனிதனின் சார்பில்
இறைவனிடம் தூது போகின்றன
மரங்களை வெட்டியதற்கு
மன்னிப்புக் கேட்டு.

இயற்கையின் அனர்த்தங்களிலிருந்து
மரங்களைக் காத்த இறைவன்
அவற்றை
மனிதர்களிடமிருந்து காப்பாற்ற
மறந்துபோனான்.

உலகத்தில் எல்லா அதிசயங்களுள்
மரங்களே தம்மைத்தாம்
பராமரித்துக்கொள்ளும்.

000

ரத்தை வெட்டி விழுத்திவிட்டு
மரமிருந்த வீதிக்கு அந்த
மரத்தின் பெயரைச் சூட்டுகிறார்கள்
மடையர்கள்.

மாம்பழத்தைத் தின்ற
மனிதனைப் பார்த்து மரம் சொன்னது
என்னை வெட்ட விரும்பாததுபோல்
ஏனைய மரங்களையும் வெட்டாதே, மனிதா!

மனிதா, எப்போ
கடைசி மரத்தையும் நீ அழிக்கிறாயோ
அன்றே நீயும் அழிந்துபோகிறாய்!

000

ங்கள் மடிதான்
அகதிகள் அரசாங்கத்தின்
அத்தாணி மண்டபங்கள்
அங்கமிழந்த குமரிகளின்
அந்தப் புரங்கள்
அழும் குழந்தைகள் தூங்கும்
அசையாத தூளிகள்.

ஆலமரங்களே,
உங்கள் கிளைகளில் தொங்குவன
விழுதுகள் மட்டுமல்ல
வாழ்விழந்த பெண்களும்தான்.

அன்று சங்கமித்தை
ஒரு கிளைதானே கொண்டுவந்தாள்
இன்று இலங்கை முழுவதும்
போதி மரங்கள்
பூத்துச் சொரிகின்றன.
பௌத்தம்தான் பட்டுப்போய்விட்டது!

000

ன்று நீ நடும்
ஒவ்வொரு மரத்துக்கும்
உன் சந்ததி உனக்கு
நன்றி சொல்லும்!

நீ நடும் ஒவ்வொரு மரத்தின் கீழும்
உட்காருவாய் என்பது நிச்சயமில்லை – ஆனால்
உன் வாழ்க்கையின் அர்த்தமே அதுதான்.

நாளை நீ இறப்பாயானால்
இன்று செய்யவேண்டியது
ஒரு மரத்தை நடுவதே!

எல்லாருக்கும் பயனுள்ளவனாக நீ
இருக்கவேண்டுமென நினைத்தால்
அடுத்த பிறப்பில்
மரமாகப் பிறந்துவிடு.

000

ரங்கள் தம்
மலர்களைக் காட்டுவது தம்
மகிழ்ச்சியைக் காட்டவே!

ஒவ்வொரு முறையும் நான்
மரத்தின் நிழலை நாடும்போது
மரம் சொல்கிறது
என் அழகைப் பார்க்காதே
என் கீழேயுள்ள வேர்களைப் பார்
அழுக்காய் இருப்பவைதான்
அழகை ஏந்துகின்றன.

மரங்களுக்கு
நீண்ட ஆயுள் இருப்பதன் ரகசியம்
அவை எப்போதும்
யோகத்தில் இருப்பதினால்தான்!

நினைவிற் கொள்
மரத்தின் கீழ்
வீணாக்கிய நேரம்
நன்றாகவே வீணாக்கப்பட்டது.

000

Friday, January 4, 2013

புதுக் கணக்கு


கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் கனிவு
இவை போதும்!
உங்கள் புதிய ஆண்டு இனிப்
பூத்துக் குலுங்கும்!

இன்றைய தினத்தின் வெற்றி
இருபது நிமிட உடற்பயிற்சியில்
ஆரம்பிக்கிறது!

பெரிதாகக் கனவு காண்
சிறிதாகத் துவங்கு!

எந்த வேலையிலும்
இனிமை இருக்கிறது
கண்டுபிடிக்கும் வரைதான் வேலை
கண்டுபிடித்ததும்
வழியெல்லாம் சோலை.

சில வேளைகளில்
உன் உழைப்புத் திறன்
ஓய்வில்தான் தங்கியுள்ளது.

உன் வேலையை ஒருவர்
பறிக்கப் பார்க்கிறார்.
அவரேன் நீயாக இருக்கக்கூடாது?

O

வ்வொரு நாளும்
ஒரு பத்துப் புதியவர்களைப்
புன்னகையால் மகிழ்விப்பாய்
ஆசீர்வாதம் என்பது
காற்றிலும் கலந்து வரும்.

புன்னகை ஒன்றுதான்
நிச்சயமாய்
வட்டியோடு திரும்பிவரும்
முதலீடு.

புன்னகையே
காதலுக்குப் போடும்
பிள்ளையார் சுழி.

சிரிக்கத் தெரிந்தவனுக்கும்
வைத்தியர் வீட்டுக்கும்
வெகு தூரம்.

நகைச்சுவை மட்டும்தான்
சாப்பாட்டுக்கு முன்பும்
சாப்பாட்டுக்கு பின்பும்
எடுக்கக்கூடிய ஒரே மருந்து.
மூன்று முறை மட்டுமல்ல
முன்னூறு முறையும்!

மழலைகளின் முகத்திலும்
முதியவர்களின் முகத்திலும்
புன்னகையைக் கண்டிருப்பாய்
இவர்கள் -
கடவுளுக்குக் கிட்டே இருப்பதால்
கவலை இல்லாதவர்கள்!

O

டவுளை மறந்தாயோ இல்லையோ
கடன் தந்தவனை மறவாதே.

மன்னித்தவர்களின் பெயரை
மனதில் வைத்திரு
மன்னிக்க வேண்டியவர்களை
மறந்து போய்விடு.

பிறக்கும்போது
பசியால் அழுகிறோம்
இறக்கும்போது
பசி தீர்ந்தும் அழுகிறோம்.

ஆசைகள் அற்றவனுக்கு
இறப்பு ஒரு இனிய விடுதலை!

கறுப்பு நிறமென்று
கலங்குகிறாய்
வெள்ளைச் சிரிப்பை
ஏன் மறந்தாய்?

தேநீர் வேளையில்
தபால்காரன் வந்தால்
ஒரு கோப்பை அவனும்
அருந்தக் கொடுங்கள்.
நாளைக்கு வருபவன்
நண்பன் மட்டுமே!

தயவுசெய்து என்ற சொல்லை
தயங்காமல் பாவியுங்கள்
நன்றி என்ற சொல் எப்போதும்
நாவில் இருக்கட்டும்.

மாதத்தில் ஒரு நாளாவது
மாமிசத்தை ஒதுக்கிவை
மிருகங்கள் உன் பெயரை
மரங்களில் செதுக்கிவைக்கும்.

ஒரு மிருகத்தின் இறைச்சியை
உண்டு மகிழ்ந்த கையால்
இன்னொரு மிருகத்தோடு விளையாட
உனக்கு உரிமை இல்லை!

மனிதர்களைக் கொன்றவனை
மிருகம் என்கிறாய்
மிருகங்களைப் பழிக்காதே!

மனிதன் ஒவ்வொருவனும்
காந்தியாகத்தான் பிறக்கிறான்
குணத்தாலும் கொள்கையாலும்
கோட்சேயாக இறக்கிறான்.

O

ளமைக்கு
வயதெல்லை கிடையாது
எண்பதுக்குப் பிறகு கொஞ்சம்
ஓய்வெடுக்கக் கூடும்.

உனக்கு ஒரு பொருள் வாங்கும்போது
உன் மனைவிக்கு இரண்டு பொருள் வாங்கு
தாம்பத்தியம் நிச்சயம் தப்பிப் பிழைக்கும்!

மனைவியோடு ஒட்டிப் படு
மிச்சமெல்லாவற்றையும்
மனைவியே பார்த்துக்கொள்வாள்.

மனைவியிடம்
மற்றப் பெண்களைப் புகழ்ந்தாயோ
தொலைந்தாய்!
மற்ற ஆண்களைப் புகழ்ந்தாலும்
தொலைந்தாய்!
அவளிடம்
அவளையே புகழ்ந்தாயோ
ஒவ்வொரு இரவும்
முதலிரவு!